ஆதன வரி தொடர்பில் வவுனியா மாநகரசபை வெளியிட்ட தகவல்
மாநகரில் பல்வேறு தேவைகள் இருந்தும் ஆதன வரியை 8 வீதமாக குறைத்துள்ளதாக வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று (16.08.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "சபையின் ஆதனவரி 15 வீதத்தில் இருந்த நிலையில் நாம் சபையை பொறுப்பெடுத்த பின்னர் அதனை 8 வீதமாக குறைத்துள்ளோம்.
இது தொடர்பாக எனது மாநகர மக்களுக்கு சில தெளிவு படுத்தல்களை வழங்க வேண்டிய தேவை உள்ளது. இந்த ஆதன வரியை 8 வீதத்தை விட இன்னும் குறைக்க முடியும்.
40 வீதமான பெறுமதி
ஆனால் உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்குமான சம்பளத்தின் 40 வீதமான பெறுமதியை அந்தந்த சபைகளே வழங்க வேண்டும். எதிர்வரும் வருடங்களில் அதன் 100 சதவீதத்தையும் சபைகளே வழங்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பாரியளவிலான நிதி அதற்கு ஒதுக்க வேண்டும். அத்துடன் வவுனியா மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டாலும் கிராமப் புறங்களில் உள்ள பல வீதிகள் குன்றும் குழியுமாகவே உள்ளது.
ஒரு கிலோ மீற்றர் தார் வீதி அமைப்பதற்கு அண்ணளவாக 10 மில்லியன் ரூபாய் தேவை. காப்பற் வீதிக்கு 20 மில்லியனும், அதே அளவிலான வடிகால் அமைப்பதற்கு 40 மில்லியனையும் செலவழிக்க வேண்டும். இப்படி பல தேவைகள் மாநகரில் உள்ளது. சபையின் சொத்துக்களை பராமரிக்க வேண்டியுள்ளது.
தற்போது எமது சம்பளத்தை விடுத்து ஒரு வட்டாரத்திற்கு அண்ணளவாக 5 மில்லியனை மாத்திரமே ஒதுக்கக்கூடிய நிதி வளமே தற்போது உள்ளது. மாநகரின் பொதுத்தேவைகளுக்காக பாரிய அளவிலான நிதி ஒதுக்க வேண்டியுள்ளது.
நிலமை இப்படி இருந்தும் 15 வீதமாக இருந்தஆதன வரியினை நாங்கள் அரைவாசியாக குறைத்துள்ளோம். வரி மதீப்பீட்டு பணிகள் வருடா வருடம் ஒழுங்கு முறையாக செய்யப்படாமையினாலே மக்கள் மீது இந்த வரிச்சுமை சடுதியாக அதிகரித்துள்ளது” என்றார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்



