7 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையமும் மக்களின் எதிர்பார்ப்பும்..!
வவுனியா மாவட்டமானது விவசாயத்தையும், தோட்டச் செய்கையையும் பிரதானமாக கொண்ட ஒரு மாவட்டம். இம் மாவட்ட விவசாயிகளின் சந்தை வாய்ப்பு வசதிகளை இலகுபடுத்தும் முகமாக கடந்த 2016ஆம் ஆண்டு பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இது வவுனியாவில் அமைககப்பட்டாலும் வட மாகாணத்திற்கான ஒரு பொருளாதார மத்திய நிலையமாக செயற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோரின் செயற்பாட்டால் தாண்டிக்குளத்தில் அமைப்பதா அல்லது ஓமந்தையில் அமைப்பதா என்ற பலத்த இழுபறிக்கு மத்தியில் வவுனியா மதவு வைத்தகுளத்தில் 291 மில்லியன் ரூபாய் செலவில் 2016 ஆம் ஆண்டு அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரினால் அடிக்கல் நாட்டப்பட்டு அதன் கட்டுமாண பணிகள் 2018 ஆம் ஆண்டு முடிவடைந்து இருந்தது.
மைத்திரி - ரணில் அரசாங்கம்
நவீன வசதிகளுடன் கூடியதாக 55 கடைத் தொகுதிகளைக் கொண்டதாக பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டுமாண பணிகள் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்த போதும் அது திறக்கப்படாது புறாக்களின் சரணாலயமாகவும், தேனீகளின் கூடாரமாகவும், பற்றைகள் மண்டியதாகவும் காட்சியளித்தது.
குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை பல அமைசசர்களும், பல அதிகாரிகளும் பார்வையிட்டு திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்ட போதும் அந்த வாக்குறுதிகள் கடந்த காலத்தில் காற்றிலையே பறந்திருந்தது.
கொவிட் தொற்று காலத்தில் குறித்த பொருளாதார மத்திய நிலையமானது கொவிற் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் இடமாக குறிப்பிட்ட சில மாதம் பயன்படுத்தப்பட்டது. அதன் பின் மீண்டும் மூடப்பட்டது. மூடப்பட்டிருந்த பொருளாதார மத்திய நிலையத்தின் பாதுகாப்புக்கு இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நிறுத்தப்பட்டு 7 வருடமாக அரச பணம் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி மூடியிருந்த பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சாரக் கட்டணம், நீர்கட்டணம் என்பன வேறு. திட்டமிடப்படாத அபிவிருத்தியாலும், உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாத அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் மக்கள் பணம் 7 வருடமாக வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பொருளாதார மத்திய நிலையம் அமைந்துள்ள பகுதி நகரில் இருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் இருப்பதால் அது வர்த்தக நடவடிக்கைக்கு பொருத்தமற்றது எனக் கூறி மரக்கறி விற்பனையாளர்கள் அங்கு செல்ல ஆர்வம் காட்டமையே இந்த நிலைக்கு காரணம்.
ஆனால் விவசாயிகள் அதனை விவசாய அமைப்புக்களிடம் கொடுங்கள். அல்லது புதிய கேள்வி கோரல் மூலம் வழங்குங்கள் என கூறுகின்ற போதும், இலுப்பையடியில் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டோரின் அழுத்தம் காரணமாக கடந்த கால அரசியல் வாதிகளும், அரச அதிகாரிகளும் மௌனமாகவே இருந்தனர்.
மரக்கறி விற்பனை
தற்போது, இலுப்பையடிப் பகுதியில் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டோர் தமக்கு இலுபையடியில் உள்ள இடமும், பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடைத் தொகுதியில் ஒன்றும் தரவேண்டும் என கோருகின்றனர். ஆனால் இரண்டு இடங்களிலும் மரககறி விற்பனை இடம்பெற்றால் பொருளாதார மத்திய நிலையத்தின் எழுச்சி என்பது கேள்விக் குறியே. அத்துடன் ஒரே தேவைக்காக ஒரே நபருக்கு இரண்டு அரச சலுகைகளையும் வழங்கினால் ஏனைய அப்பாவி மக்களின் நிலை என்ன? தோட்டச் செய்கையாளர்களின் நிலை என்ன..?
வவுனியா நகரமயமாக்கல் திட்டத்தில் இலுப்பையடியில் உள்ள மரக்கறி விற்பனை செய்யும் இடங்கள் உள்வாங்கப்பட்டுள்ள இடமாக இருப்பதால் அங்கு வேறு நவீன திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம். இது தவிர, இரண்டு இடங்களிலும் மரக்கறி விற்பனை என்பதை நிறுத்தி ஒரு இடமாக மாற்றுவதன் மூலமே பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைக்க முடியும் என்பதே தோட்டச் செய்கையாளர்களின் கருத்தாகும்.
இன்னொரு விடயமும் உண்டு. தற்போது இலுப்பயைடியில் இருந்த மரக்கறி கடைகளை குத்தகைக்கு பெற்றோர் சிலரே அதில் வியாபாரம் செய்கின்றர். பலர் அதனை உப குத்தகைக்கு கொடுத்து அதில் பணம் சம்பாதிக்கின்றார்கள். ஆகவே புதிய பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள 55 கடைகளும் தற்போது வியாபாரம் செய்பவர்களுக்கு வழங்கப்படுமா அல்லது உப குத்தகைக்கு விட்டோருக்கும் வழஙகப்படுமா என்பதே மக்களது கேள்வியாக இருந்தது.
அந்த கேள்விக்கு விடை கிடைக்கும் வகையில் குறித்த மொத்த மரக்கறி விற்பனை நிலையங்களை முன்னர் பெற்றவர்களுக்கே தற்போது பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி அமைத்த பின் இடம்பெற்ற வவுனியா மாவட்ட முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் ஆராயப்பட்டது.
பல பிரச்சினைகள்
இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க கருத்து தெரிவிக்கையில், 291 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையமானது, சில அரசியல் தலையீடுகள் மற்றும் இனம் சார்ந்த பிரச்சினைகளாலும், வியாபாரிகள் அல்லது தனிப்பட்ட நலனை முன்னிறுத்தியமை போன்றவற்றினால் அதனை ஆரம்பிப்பதற்கு தற்போது வரை ஒரு இழுபறி நிலை காணப்படுகின்றது.
இது தொடர்பாக பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை அரசாங்க அதிபரினால் முன்னெடுக்கப்பட்ட போதும் அதனை திறக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. எனவே இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிபரும் இணைந்து கலந்துரையாடி இப்பொருளாதார மத்திய நிலையத்தினை திறப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக தெரிவித்து இருந்தார்.
அதற்கமைவாக, தற்போதைய அரசாங்கத்தின் வர்த்தக வாணிப கூட்டுறவுத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க வவுனியாவிற்கு வருகை தந்து இப் பொருளாதர மத்திய நிலையத்தை திறப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், மொத்த மரக்கறி விற்பனையாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தார்.
வவுனியா மாநகரசபையும் இதற்கு ஆதரவாக மொத்த மரக்கறி வியாபரிகளுடன் பேசி நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அதனடிப்படையில் அரசாங்கம் மற்றும் வவுனியா மாநகரசபை என்பவற்றின் கூட்டு முயற்சியின் வெற்றியாக 7 வருடங்களுக்கு பின் கடந்த 3 ஆம் திகதி இலுப்பயடியில் இருந்த மொத்த மரக்கறி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக, வாணிப கூட்டுறவுத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் பிரதி அமைச்சர்களான எம்.ஜெயவர்த்தன, உபாலி சமரசிங்க, மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ. திலகநாதன் ஆகியோர் இணைந்து பொருளாதார மத்தியநிலையத்தை திறந்து வைத்தனர்.
அங்கு, இலுப்பையடியில் மொத்த மரக்கறி விபாபர நிலையங்களை வைத்திருந்த 35 பேருக்கும் ககைள் வழங்கப்பட்டுள்ளதுடன், சதோசவுக்கு கடை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஏனைய கடைகள் இன்னும் வழங்கப்படவல்லை. இடவசியுடன் சிறப்பாக அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் 7 வருடங்களின் பின் திறக்கப்பட்டுள்ளது. அது தொடந்தும் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.








