வவுனியா - செட்டிக்குளத்தில் காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி
வவுனியா - செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கப்பாச்சி கிராமத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ள சோக சம்பவம் பதிவாகியுள்ளது.
கப்பாச்சி குளத்தின் கீழ் உள்ள வயல்வெளியில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய நலீம் என்பவர் கப்பாச்சி குளத்தின் கீழுள்ள வயலுக்கு யானைக் காவலுக்காக நேற்றிரவு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை அவர் வீடு திரும்பவில்லையென மனைவி வயல்வெளிக்குச் சென்று பார்த்த போது குறித்த நபர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அயலவர்களின் உதவியுடன் செட்டிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.