றிசாட் கைது விவகாரம் - வவுனியா நகரசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக வவுனியா நகரசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான ஏ.ஆர்.எம். லரீப், எம்.எஸ்.அப்துல்பாரி, மஞ்சுளா தேவி ஆகியோரால் முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கண்டன தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஏ.ஆர்.எம்.லரீப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில்,
றிசாட் பதியுதீனின் கைதானது இந்த நாட்டு முஸ்லிம்களை வேதனை படுத்துகின்ற ஜனநாயக முறையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கைதாகக் காணப்படுகின்றது.
மேலும் இந்த ஜனநாயக நாட்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்வதாக இருந்தால் சபாநாயகருக்குத் தெரியப்படுத்தி சபாநாயகர் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னரே கைது செய்யப்பட வேண்டும். மாறாக இதற்கு மாற்றமாக இந்த கைது இடம்பெற்று இருக்கின்றது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒருமுறை கைது செய்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்து எவ்வித குற்றமும் அற்றவர் என விடுதலை செய்யப்பட்டவர் எமது கட்சியின் தலைவர். அவரை மீண்டும் இந்த குண்டு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி இடம்பெற்ற இந்த கைது ஒரு சிலரைத் திருப்திப்படுத்துவதற்கான கைதாகவே காணப்படுகின்றது.
தமிழ் பேசும் சமூகத்தின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதித்து முஸ்லிம் தலைமைகளை அவர்களின் குரல்களை நசுக்கும் செயற்பாடுகளையும் கைவிட்டு விட்டு நாட்டின் தற்போது கோவிட் 3ஆவது அலை வீசுகின்றது.
அதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம் மோகன், நா.சேனாதிராஜா, ரி.கே.ராஜலிங்கம் ஆகியோர் றிசாட் பதியூதினின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.