இராணுவத்தினரை மோதிச்சென்ற மரக்கடத்தல் வாகனத்தின் சாரதியை தேடும் படையினர்
வவுனியாவில் நேற்று மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனமொன்று இராணுவத்தினரை மோதி காயமடைய செய்த சம்பவம் தொடர்பில் வாகனத்தில் சாரதியை தேடும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதன் வாகனத்தின் சாரதி வவுனியா, சாந்தசோலை பகுதியில் தங்கியிருப்பதாக விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இன்று சாந்தசோலையில் சில பகுதிகளை முடக்கி குறித்த வாகனத்தின் சாரதியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மரக்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிலர் நேற்றிரவு படையினரின் சோதனைச்சாவடியில் வாகனத்தை நிறுத்த முற்பட்ட போது கடமையிலிருந்த படையினர் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத்தகவல் அடிப்படையில் சாந்தசோலை கிராமத்தில் முதலாம் குறுக்குத் தெரு, இரண்டாம் குறுக்குத் தெரு, கிரேஷர் வீதி என்பனவற்றை முடக்கிய படையினர் அங்கிருந்து மக்கள் வெளியேறுவதையும், உட்செல்வதையும் சில நிமிடங்கள் படையினர் தடை செய்திருந்தனர்.