வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய கடல் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு..
உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான தீர்த்தம் எடுத்தல் உற்சவம் நேற்றையதினம் மாலை (25.05.2026) முல்லைத்தீவு தீத்தக்கரை பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 18.05.2026 திங்களன்று பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியிருந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்றையதினம் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகை தாய்க்கான விளக்கு எரிப்பதற்கான உப்பு நீரினை கடலிலே பெற்றுக் கொள்கின்ற நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி, பறை வாத்தியம் முழங்க, அடியவர்கள் புடைசூழ, பாரம்பரிய வீதிகள் வழியாகச் சென்று தீர்த்தக்கரையில் அமைந்திருக்கின்ற முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தீர்த்தக்குடம் சென்ற வீதி வழியாகவே மீண்டும் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தை வந்தடைந்ததன் பின்னர், உரிய முறைப்படி முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் உள்ள அம்மனுக்கு மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு, கச்சை நேர்ந்து, மடைபரவி உப்புநீரிலே விளக்கேற்றி தூழி பிடித்து விசேட பூசை இடம்பெற்று ஏடு படிக்கும் நிகழ்வும் ஆரம்பிக்கப்படும்.
காட்டு விநாயகர் ஆலய உற்சவமானது தொடர்ச்சியாக இடம்பெற்று 31.05.2026 அன்று முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்று, மறுநாள் எதிர்வரும் திங்கட்கிழமை 01.06.2026 அன்று அதிகாலையில் காட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










