வரி செலுத்தாதவர்கள் குறித்து நாட்டு மக்களுக்கு மத்திய வங்கிய ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு
வரி அறவீடுகள் உள்ளிட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்பில் யாராலும் விமர்சனங்களை முன்வைக்க முடியும் என்ற போதும் இம்மறுசீரமைப்புக்களை மேற்கொண்டிருக்காவிடின், நாம் எந்த நிலையில் இருப்போம் என்பது பற்றி எவரும் சிந்திப்பதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல பிரஜைகளும் தமக்குரிய வரியை சரியாகச் செலுத்துவதுடன், தாம் அறிந்த எவரேனும் வரி செலுத்தாதிருந்தால் அதுகுறித்து தகவல் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெறுமதிசேர் வரி (வற்வரி) விதிப்பு உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பற்றியும், நாம் பயணிக்க வேண்டிய பாதை குறித்தும் தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாடு கடந்த 2022ஆம் ஆண்டு முன்னொருபோதும் இல்லாத வகையிலான மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்தது. குறிப்பாக பொருளாதாரம் 8 சதவீதத்தினால் சுருக்கமடைந்ததுடன் பணவீக்கம் சடுதியாக பெருமளவால் அதிகரித்தது. வெளிநாட்டுக் கையிருப்பின் அளவு வீழ்ச்சியடைந்ததுடன் வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகை இடைநிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து 2023ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்விளைவாக பணவீக்கம் குறைக்கப்பட்டமை, வெளிநாட்டுக் கையிருப்பு மட்டம் உயர்வடைந்தமை உள்ளிட்ட பிரதிபலன்களை அடைந்து கொள்ள முடிந்ததுடன் பொருளாதாரம் மீண்டும் சரியான பாதையில் பயணிக்க ஆரம்பித்தது.
பொருளாதார மீட்சியை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கள் மிகக்கடினமானவையாக இருப்பினும், அவற்றைத் தொடர்ந்து சீராக முன்னெடுத்துச் செல்வதன் மூலம் இவ்வாண்டில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்து கொள்ள முடியும்.
குறிப்பாக 2024இல் 3 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்வதற்கும், பணவீக்கத்தை 5 சதவீத மட்டத்தில் பேணுவதற்கும், ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் எதிர்பார்த்திருக்கின்றோம்.
தற்போதைய சூழ்நிலை மிகவும் கடினமானதாக இருப்பதனால், அதுகுறித்து யாராலும் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்க முடியும்.
ஆனால் நாம் முன்னெடுத்திருக்கும் மறுசீரமைப்புக்களையும், கடினமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்காவிடின், நாம் எந்த நிலையில் இருப்போம் என்பது பற்றி பொதுமக்கள் சிந்திப்பதில்லை. உண்மையில் நாம் உடனடி மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்தியிருக்காவிடின் லெபனான், ஆர்ஜென்டீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நிலையைத்தான் அடைந்திருப்போம்.
இவ்வாறான மிகமோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக்குறுகிய காலத்தில் அதிலிருந்து விரைவாக மீண்ட ஒரேயொரு நாடு இலங்கை தான். அடுத்ததாக நாம் 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் உத்தியோகபூர்வ கடன்வழங்குனர்களுக்கான கடன்மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்தினோமே தவிர, நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாக அறிவிக்கவில்லை.
கடன்மீள்செலுத்துகை
வங்குரோத்துநிலை என்பது கடன்களை மீண்டும் எப்போதும் செலுத்தப்போவதில்லை எனும் நிலையாகும். அவ்வாறான சூழ்நிலையில் யாரும் எமக்கு கடன்வழங்க முன்வரமாட்டார்கள். ஆனால் நாம் கடன்மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்தியதன் மூலம் கடன்மறுசீரமைப்பின் ஊடாக கடன்களை மீளச்செலுத்துவதற்குரிய காலப்பகுதியை நீடிக்குமாறு கோரினோம்.
கடன் ஸ்திரத்தன்மையை அடைவதற்கு இன்னும் சொற்பளவிலான நடவடிக்கைகளையே முன்னெடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது முன்னெடுக்கப்படும் சகல மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் அனைவருக்கும் இடையே சமனாகப் பகிர்ந்து கொள்வதன் மூலமே இந்த நெருக்கடியிலிருந்து முழுமையாக மீளமுடியும்.
குறிப்பாக நாட்டின் சகல பிரஜைகளும் தமக்குரிய வரியை சரியாகச் செலுத்துவதுடன், தாம் அறிந்த எவரேனும் வரி செலுத்தாதிருந்தால் அதுகுறித்து தகவல் வழங்கவேண்டும். நாம் கீழ்நோக்கி இலகுவாகப் பயணிக்கலாம். ஆனால் அதிலிருந்து மீண்டும் மேல்நோக்கிப் பயணிப்பதென்பது கடினமானதாகும்.
அதனைப் படிப்படியாகத்தான் செய்ய முடியும். இப்போது நாம் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இதில் சிறிய மாற்றங்களை மேற்கொள்ளலாம். ஆனால் பயணத்தின் திசையை மாற்றினால் மீண்டும் மிகமோசமான நெருக்கடிக்குள் விழுந்துவிடுவோம் என்பதை மனதிலிருத்திச் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
