ஒமிக்ரோனை தடுக்க முடியாமல் திணறும் தடுப்பூசிகள் : இஸ்ரேல் புதிய ஆய்வு
மனிதர்களுக்கு 4 முறை கோவிட் தடுப்பூசிகள் போட்டும் கூட ஒமிக்ரோனுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி வரவில்லை என்று இஸ்ரேல் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுக்க ஒமிக்ரோன் வேகமாகப் பரவி வரும் நிலையில், ஒமிக்ரோன் பரவல் காரணமாகப் பல நாடுகளில் மூன்றாம் அலை பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுதும் ஒமிக்ரோன் பரவலை எப்படித் தடுப்பது என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இஸ்ரேலில் மனிதர்களுக்கு 4 முறை கோவிட் தடுப்பூசிகள் போட்டு சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் அரசு கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் Sheba Medical Centre மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் மொத்தம் 150 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 4 டோஸ் கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முதலில் மொடர்னா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதன்பின் கடைசி இரண்டு டோஸ் பைசர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதில் 4வது டோஸ் போட்டபின் 150 பேரின் எதிர்ப்புச் சக்தியும் அதிகரித்துள்ளது. கோவிட்டிற்கு எதிரான ஆண்டிபாடிகள் மிக அதிக அளவில் உடலில் உயர்ந்து உள்ளது. மூன்றாவது டோஸை விட நான்காவது டோஸில் அதிக ஆண்டிபாடிகள் இருந்துள்ளது.
ஆனால் 4 டோஸ்கள் போடப்பட்ட பின்பும் கூட இவர்களுக்கு ஒமிக்ரோன் பரவலை எதிர்கொள்ளும் எதிர்ப்புச் சக்தி கிடைக்கவில்லை. அதாவது ஒமிக்ரோன் வகை கோவிட்டை எதிர்கொள்ளுங்கள் ஆண்டிபாடிகள் இவர்களுக்கு உருவாகவில்லை.
4 டோஸ் வேக்சின் போடாதவர்களுக்கும் 4 டோஸ் போட்டவர்களுக்கும் இடையில் ஒப்பிட்டுப் பார்த்ததில் இரண்டு குழுவிற்கும் ஒமிக்ரோன் எதிர்ப்புச் சக்தி இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிர்ப்புச் சக்தி உயர்ந்து உள்ளதே தவிர ஒமிக்ரோனை எதிர்கொள்ளும் திறன் இல்லை என்று இந்த ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.