வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கல் குறித்து வெளியாகியுள்ள தகவல்
வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 88 வீதமானவர்கள் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் மூத்த பிரஜைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு சுகாதாரப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 70 வீதமானவர்கள் முதலாவது டோஸ் தடுப்பூசிகளையும், 88 வீதமானவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.
ஏனையவர்களும் அடுத்து வரும் நாட்களில் தடுப்பூசி ஏற்றப்படும் இடங்களுக்குச் சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.
அத்துடன், 30 - 59 வயதிற்கிடைப்பட்ட 51 வீதமானவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசிகளையும், 72 வீதமானவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர் எனவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.