படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கும் தடுப்பூசி - சுகாதார சேவைகள் பணிப்பாளர்
எல்லைக்கிராம மக்களிற்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், படுக்கையில் உள்ள நோயாளர்களும் அழைத்தால் நோயாளர் காவு வண்டியில் ஏற்றி தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அச்சமின்றி தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
முன்னிலை பணியாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கும் தடுப்பூசி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெறவுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை 60 வயதுக்கு மேற்பட்டோருக்குக் கடந்த திங்கள் தொடக்கம் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் 3 இடங்களில் நடைபெற்று வருகின்றது.
இதுவரை 1800க்கு மேற்பட்டோருக்கு நாங்கள் வழங்கியுள்ளோம். பக்க விளைவுகள் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மக்கள் அனைவரும் இதனை முன்னுதாரணமாக கொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த எமக்கு உதவ வேண்டும்.
உங்களையும், குடும்பத்தையும் பாதுகாப்பதுடன், சமூகத்தையும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலம் பாதுகாக்க வேண்டும். கடந்த நாட்களில் ஆடைத்தொழிற்சாலையில் தடுப்பூசி ஏற்றப்பட்டபோது சிலர் தடுப்பூசி ஏற்றப்பட்டமையால் ஏற்பட்ட பக்க விளைவுகள் என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
ஆனால் அங்கே எந்தவொரு பக்க விளைவும் ஏற்படவில்லை. சுகாதார வைத்திய நிபுணர்களால் சோதிக்கப்பட்டு அன்றோ அல்லது மறுநாளோ வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
அவர்களிற்கு எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றோம். அதற்குச் சான்றாக இன்றுவரை மேலும் 1800 பேருக்கு மேல் தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம்.
அவர்கள் யாருமே எமக்கு எந்தவொரு முறைப்பாடுமே செய்யவில்லை. ஓரிரு நாட்களில் 5000 தடுப்பூசிகளை வழங்கலாம் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் ஒரு நாளைக்கு 600 பேர் வரையுமே தடுப்பூசிகளை வழங்க முடிகின்றது.
அச்சம் காரணமாக மக்கள் தடுப்பூசி ஏற்றுவதற்கு உற்சாகம் காட்டவில்லை. அதேவேளை மாவட்டத்தில் நோய்த்தாக்கம் இல்லாமையால் மக்களின் அக்கறையின்மையும் கிராமப்புறங்களில் காணப்படுகின்றது.
அது தொடர்பான விழிப்புணர்வு இல்லாதும் இருக்கின்றது. நோய்த்தாக்கம் இல்லாத நிலையில் அடுத்தகட்டம் நோய்த்தாக்கம் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதம் இல்லை.
அடுத்த தடவை இதைவிட மோசமானதாகக்கூட இருக்கலாம். 2ம் அலை பெரியளவில் தாக்கம் இல்லாவிட்டாலும், 3ம் அலை பெரிய தாக்கமாக அமைந்திருந்தது.
இந்த சந்தர்ப்பம் எங்களிற்குக் கிடைத்த பெரும் சந்தர்ப்பம். அதனைப் பாவித்து 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை வந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
எந்தவித அச்சமும் இல்லாமல் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம். இரணைமடு இராணுவ தள வைத்தியசாலை, கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம், பூநகரி மத்திய கல்லூரி ஆகிய இடங்களில் குறித்த பணிகள் இடம்பெற்று வருகின்றது.
நாளையும் இத்திட்டம் தொடரும். எனவே, வந்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அடுத்தகட்ட தடுப்பூசி எதிர்வரும் 12ம் திகதியளவில் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
கிடைத்தவுடன் பிரதேச வைத்தியசாலை, தள வைத்தியசாலை, பொது வைத்தியசாலை மற்றும் தூர இடங்களில் உள்ளவர்களிற்கு பொது இடங்களிலே தடுப்பூசியை ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
இங்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் கிட்ட உள்ள நிலையங்களில் வந்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும். குறித்த பகுதிகளில் தடுப்பூசி ஏற்றப்படும்போது அறிவிக்கப்படும்.
அவ்வந்த பிரதேசங்களில் உள்ள மக்கள் வரும்போது உறுதிப்படுத்தக்கூடிய வகையில் அடையாள அட்டையையும் கொண்டு வர வேண்டும்.
அதேவேளை இந்த மாவட்டத்தில் நீண்ட காலமாகத் தற்காலிகமாக வந்து தங்கியுள்ளவர்களும், தடுப்பூசியை இங்கு பெற்றுக் கொள்ளலாம்.
அதன்போது பிரதேசத்திற்குப் பொறுப்பாக உள்ள கிராம சேவையாளரைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தி அதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
முல்லைத்தீவு, மற்றும் மன்னார் மாவட்டத்தின் எல்லை கிராம மக்கள் தூர வசதியைக் கருத்தில் கொண்டு எமது மாவட்ட வைத்தியசாலைகளில் சேவைகளைப் பெற்றுக்கொள்வது வழமை.
அவர்களிற்குத் தடுப்பூசி ஏற்றுவதற்கு முன்னனுமதியைப் பெற்றுக்கொண்டு அவர்களிற்கான ஒழுங்குகளையும் செய்யலாம் என்று நாங்கள் யோசித்துள்ளோம்.
நோய்வாய்ப்பட்டு அல்லது, வயது முதிர்ந்து போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் மக்கள் இருந்தால், பிரதேச வைத்தியசாலைகளில் தடுப்பூசி ஏற்றப்படும்போது எமக்கு தகவல் வழங்கினால் நோயாளர் காவு வண்டி மூலம் அவர்களை அழைத்து வந்து தடுப்பூசியை வழங்க முடியும்.
அதேவேளை தற்போது முதியோர் இல்லங்களில் உள்ளவர்களிற்கும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்ற வருகின்றன. எதிர்காலத்தில் எமக்கு கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளில் முன்னிலை பணியாளர்களிற்கு வழங்கக்கூடியதாக இருக்கும்.
பிரதேச சபைகள், வங்கிகள், போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோர், கடைகள், சந்தைகள், முன்னிலையில் பணியாற்றுவோரை முன்னிலைப்படுத்தி தடுப்பூசி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12ம் திகதிக்குப் பின்னர் நாங்கள் முன்னெடுத்துச் செல்லலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.
எங்கள் மாவட்டத்தை பொறுத்தளவில் மக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வருவதில்லை எனக் கவலை அளிக்கின்றது. ஏனைய மாவட்டங்களில் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்குக் காத்திருக்கின்றார்கள்.
ஆனால் இங்கு, ஊசி போடும் இடங்கள் மக்கள் இல்லாது வெறிச்சோடி காணப்படுகின்றது. குறித்த பணிக்காக அதிகளவான ஊழியர்களை நிறுத்தியுள்ள நிலையில் அவர்களின் நேரங்கள் வீணடிக்கப்படுகின்றது.
இந்த நிலையை உணர்ந்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள மக்கள் அச்சமின்றி முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
