முல்லைத்தீவு மாவட்டத்திலும் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுகின்றது
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களே சுகாதார விதிமுறைக்கு அமைவாக வீதிகளில் நடமாட முடியும் என முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றியவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திய அட்டையினை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முதற்கட்ட தடுப்பூசி பெறாதவர்களுக்கான தடுப்பூசிகள், முல்லைத்தீவு உண்ணாப்பிலவு மருத்துவமனையிலும், அளம்பில் ஆதார மருத்துவமனையிலும், புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார பணிமனை, மூங்கிலாறு ஆதார மருத்துவமனை, ஒட்டுசுட்டான் பிராந்திய சுகாதார பணிமனை, மல்லாவி பிராந்திய சுகாதார பணிமனை ஆகிய இடங்களில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
30 அகவைக்கு மேற்பட்ட மக்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் பிராந்திய சுகாதார பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்படுவதுடன், தடுப்பூசி பெற்றவர்களே வீதிகளில் செல்ல அனுமதிக்கப்படும் நிலை முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வருவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பிராந்திய சுகாதார பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.