சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது தீமையை விட அதிக நன்மை பயக்கும் - ரமேஷ் பத்திரண
12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்து, ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயின் கருத்துக்களுக்கு முரண்படும் வகையில் இணை அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண(Ramesh Pathirana) தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோவிட்க்கு எதிராகச் சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவதால், தீங்கு விளைவிக்கும் அம்சங்களை விட அதிக நன்மை பயக்கும் என்று அவர் இன்று கூறியுள்ளார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு(WHO), தடுப்பூசிக்குப் பின்னர் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் ஒப்பிடும் போது, அதன் நன்மைகளைக் கருத்தில் கொண்டு சிறுவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப் பரிந்துரைத்துள்ளது என்று ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர்களின் குழுக்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் மற்றும் இலங்கையில் குழந்தை மருத்துவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலங்கையில் நீண்ட நாள் நோயாளி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆரம்பச் சுகாதாரப் பாதுகாப்பு, தொற்றுநோய்கள், ராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, நேற்று வெளியிட்ட தகவலில், உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிகள் கோவிட் தடுப்பூசிகள், கோவிட் வைரசை விட 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று கோடிட்டுக் காட்டியிருந்தார்.