அமெரிக்க துணை ஜனாதிபதியின் கருத்து தவறானது என பிரித்தானியா சுட்டிக்காட்டு
பிரித்தானிய மாணவர் ஹென்றி நோவக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, குடியேற்றவாசிகளின் ஊடுருவலுடன் தொடர்புபடுத்திப் பேசிய அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் கருத்து முற்றிலும் தவறானது என பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லேமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிரிட்டனில் பிறந்து வளர்ந்த விக்ரம் திக்வா என்ற பிரித்தானிய பிரஜையினாலேயே 18 வயதான நோவக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார் என்றும், இதற்கும் குடியேற்றத்திற்கும் எந்தவொரு தொடர்புமில்லை என்றும் வான்ஸுடனான தொலைபேசி உரையாடலின் போது லேமி சுட்டிக்காட்டியுள்ளார்.
தவறான தகவல்
மேலும், தனது மகனின் மரணத்தை சமூகத்தில் பிரிவினையையோ அல்லது வெறுப்பையோ ஏற்படுத்தப் பயன்படுத்த வேண்டாம் என நோவக்கின் தந்தை விடுத்த கோரிக்கையையும் லேமி அமெரிக்கத் துணை ஜனாதிபதிக்கு நினைவூட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சவுதாம்ப்டனில் (Southampton) 18 வயதான பிரித்தானிய மாணவர் ஹென்றி நோவக், விக்ரம் திக்வா (Vickrum Digwa) என்ற 23 வயது இளைஞனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலைச் சம்பவத்தின் போது, தான் இனரீதியாகத் தாக்கப்பட்டதாக விக்ரம் திக்வா பொலிஸாருக்கு தவறான தகவல்களை வழங்கியிருந்தார். இதனை நம்பிய பொலிஸார், கத்திக் குத்துக்கு இலக்காகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோவக்கிற்கு கைவிலங்கிட்டனர்.

இந்தச் சம்பவம் பிரித்தானியாவில் பொலிஸ் நடைமுறைகள் குறித்து பெரும் சர்ச்சையையும் வன்முறைப் போராட்டங்களையும் தோற்றுவித்திருந்தது.
இந்தக் கொலையாளியான விக்ரம் திக்வாவிற்கு கடந்த வாரம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தனது 'X' சமூக ஊடகப் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அதில், "ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் குடியேற்றவாசிகளின் பாரிய ஊடுருவலுக்கு (Mass invasion of migrants) எதிராகச் செயல்படத் தவறியதே இந்த மரணத்திற்குக் காரணம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.