ஈரானில் இரவோடு இரவாக தரையிறக்கப்பட்ட Beast ஹெலிகொப்டர்கள்.. அமெரிக்காவின் மின்னல் வேக நடவடிக்கை!
கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு ஈரான் வான்பரப்பில் ஈரானிய பாதுகாப்புப் படைகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15 போர் விமானத்தில் பயணித்து மாயமான அதன் முக்கிய அதிகாரியை அமெரிக்க இராணுவம் அதிரடியாக மீட்டுள்ளது.
அமெரிக்க இராணுவ வரலாற்றிலேயே மிகவும் துணிகரமான மற்றும் ஆபத்தான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தச் சம்பவம் கருதப்படுகின்றது.
குறித்த விமானி தற்போது பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த போர் விமானத்தில் இரண்டு ஊழியர்கள் பயணித்த நிலையில், விமானம் சுடப்பட்டவுடன் இருவரும் வெளியேறினர்.
தீவிரமடையும் வான்வழி தாக்குதலினால் நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள் - அபுதாபியில் பற்றியெரியும் ஆலை
துப்பாக்கிச் சூடு மோதல்கள்
அவர்களில் ஒரு விமானி ஏற்கனவே மீட்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவதாகக் காணாமல் போன ஆயுத அமைப்பு அதிகாரியை (WSO) மீட்பதில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு பெரும் போட்டியே நிலவியது.

தெற்கு ஈரானின் கடினமான மலைப்பகுதிகளில் இந்த மீட்புப் பணி ஒரு மிகப்பெரிய போர்க்கால நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டது. மீட்புப் பணியின் போது அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகளுக்கு இடையே நேரடித் துப்பாக்கிச் சூடு மோதல்கள் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.
ஈரானிய எதிரிப் படைகள் தன்னை நெருங்கிக் கொண்டிருந்த ஒரு இக்கட்டான சூழலில், ஈரானின் ஆபத்தான மலைப்பகுதிகளில் அந்த அதிகாரி பதுங்கியிருந்ததாக ட்ரம்ப் விவரித்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் 24 மணிநேரமும் அவரது இருப்பிடத்தைக் கண்காணித்து, இந்த மீட்புப் பணியை மிகத் துல்லியமாகத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது டஜன் கணக்கான போர் விமானங்கள் ஈரானிய எல்லைக்குள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் அமெரிக்கத் தரப்பில் உயிரிழப்புகளோ அல்லது படுகாயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிசக்திவாய்ந்த ஆயுதங்கள்
ஈரானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள், ஏவுகணைகள் மற்றும் ரேடார் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இந்த அசாத்தியமான மீட்புப் பணி நடைபெற்றுள்ளது.

இதில் HH-60W 'Jolly Green II' மீட்பு ஹெலிகொப்டர்கள், A-10 வார்தாக் தாக்குதல் விமானங்கள், HC-130 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம், மற்றும் F-35 ஸ்டெல்த் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், 'பீஸ்ட்' (Beast) என்று அழைக்கப்படும் HH-60W 'Jolly Green II' ஹெலிகொப்டர் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இது கடினமான வானிலை மற்றும் இரவு நேரங்களில் மீட்புப் பணிகளைச் செய்யக்கூடிய அதிநவீன சென்சர்களைக் கொண்டது.
இதேவேளை, மாயமான அமெரிக்க வீரரைத் தேடி வந்த அமெரிக்காவின் ட்ரோன் (Drone) ஒன்றை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) சுட்டுவீழ்த்தியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, அமெரிக்க வீரரை உயிருடன் பிடிப்பதற்காக ஈரான் முயற்சி செய்ததோடு, அவரைப் பற்றி தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.
ஹெலிகொப்டர்கள் மீது தாக்குதல்
ஆனால், இவ்வாறான இக்கட்டான சூழல்களில் உயிர் பிழைப்பதற்கான உயர்தரப் பயிற்சிகளைப் பெற்றுள்ள அமெரிக்க வீரர்கள், எதிரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காகத் தங்களை மறைத்துக்கொண்டு தப்பிப்பிழைக்கும் நுட்பங்களைக் கையாண்டுள்ளனர்.

இந்த விமானம் ஈரானின் தென்மேற்குப் பகுதியான கோகிலுயே மற்றும் போயர்-அஹ்மத் அல்லது குசெஸ்தான் ஆகிய மாகாணங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வீழ்த்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இப்பகுதிகளில் வசிக்கும் நாடோடிப் பழங்குடியின மக்கள், அமெரிக்க மீட்புக் குழுவின் இரண்டு 'பிளாக் ஹாக்' ஹெலிகாப்டர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஈரானியத் தரப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான காணொளிகளை சர்வதேச ஊடகம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது. F-15E ரக விமானமானது தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆகிய இரு நிலைகளிலும் பயன்படுத்தக்கூடியது.
ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டுவீழ்த்தும் நோக்கில் இது ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஈரானின் வான் பாதுகாப்பு ஏவுகணைத் தாக்குதலே இந்த விமானத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் அமெரிக்க வீரரின் மீட்புடன் ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri