சரத் வீரசேகரவின் விசா கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த மாதம் அமெரிக்காவின் வாஷிங்டனில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதிநிதிகளுக்கான சிறப்பு செயலமர்வு நடைபெறவுள்ளது.
இது தொடர்பான செயலமர்வுக்கு 10 நாட்கள் நடைபெறும் துறைசார் கண்காணிப்பு குழுக்களின் தலைவர்களை அழைத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செயலமர்வில் பங்கேற்பவர்கள் அமெரிக்க விசா பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விசா கோரிக்கை நிராகரிப்பு
அதற்காக தேசிய பாதுகாப்பு துறை கண்காணிப்புக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர விண்ணப்பித்த போதிலும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த மாநாட்டில் பங்குபற்றும் தலைவர்கள் பட்டியலிலிருந்து சரத் வீரசேகரவின் பெயரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இது தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்குவதற்கான மக்கள் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக தாம் தெரிவித்த அறிக்கையினால் அமெரிக்கா தனக்கு விசா வழங்க மறுத்துள்ளதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.