அமெரிக்க இடைத்தேர்தல் 2026: ட்ரம்பின் குடியேற்றக் கொள்கையால் அதிருப்தியில் கியூபா
அமெரிக்காவின் தென் புளோரிடா பகுதியில், குறிப்பாக மியாமி-டேட் கவுண்டியில் குடியரசுக் கட்சியின் கோட்டையாக விளங்கும் கியூபா மற்றும் வெனிசுலா வம்சாவளி வாக்காளர்களின் ஆதரவு, 2026 இடைத்தேர்தலுக்கு முன்னதாக சரியத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
மந்தமான பொருளாதாரம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகள் ஆகிய காரணிகளால் இலத்தீன் அமெரிக்க வாக்காளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
2024 ஜனாதிபதி தேர்தலில் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மியாமி-டேட் பகுதியை குடியரசுக் கட்சி கைப்பற்ற இவர்களே முக்கியக் காரணமாக இருந்தனர்.
அமெரிக்க இடைத்தேர்தல்
ஆனால், தற்போது நிலவும் சூழல் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு புதிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் நாடு கடத்தும் நடவடிக்கைகள் இலத்தீன் அமெரிக்க சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2025ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரக்கணக்கான கியூபா மற்றும் வெனிசுலா மக்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குடியரசுக் கட்சி பிரதிநிதி மரியா எல்விரா சலாசர், குடியேற்ற விவகாரத்தில் அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், அது இடைத்தேர்தலில் கட்சிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.
மியாமியில் உள்ள பல கியூபா வம்சாவளி குடும்பங்கள், தங்கள் உறவினர்கள் தடுத்து வைக்கப்படுவதையும் நாடு கடத்தப்படுவதையும் கண்டு, "குடியரசுக் கட்சிக்கு வாக்களித்ததற்காக வருந்துகிறோம்" என்று தெரிவிப்பதாக குடியேற்ற வழக்கறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
மதுரோவின் கைது
அதேவேளையில், வெனிசுலா ஜனாதிபதி மதுரோவின் கைது போன்ற வெளிநாட்டுக் கொள்கை நடவடிக்கைகளால் ஒரு தரப்பு வாக்காளர்கள் இன்னும் ட்ரம்பிற்கு ஆதரவாகவே உள்ளனர்.
இருப்பினும், சமீபத்திய உள்ளூர் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்று வருவது அவர்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளது.

2026 இடைத்தேர்தல் என்பது வெறும் நாடாளுமன்ற இடங்களுக்கான போட்டி மட்டுமல்லாமல், தென் புளோரிடாவின் இலத்தீன் அமெரிக்க வாக்காளர்களின் நீண்டகால அரசியல் விசுவாசத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கியப் போர்க்களமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுக் கட்சி பொருளாதாரத்தை முன்னிறுத்தி வாக்காளர்களைத் தக்கவைக்க முயலும் வேளையில், ஜனநாயகக் கட்சி குடியேற்ற உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பை முன்வைத்துத் தனது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தி வருகிறது.