நைஜீரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை நிறைவு: மீளப்பெறப்பட்ட அமெரிக்க படைகள்
நைஜீரியாவில் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கூட்டு இராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, அங்கு குவிக்கப்பட்டிருந்த தங்களின் பெரும்பாலான படைகளை அமெரிக்கா மீளப் பெற்றுள்ளதாக அமெரிக்க ஆபிரிக்க கமாண்ட் (AFRICOM) தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் இணைந்து நடத்திய அதிரடித் தாக்குதலில், சர்வதேச ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாவது முக்கியத் தலைவனான அபு-பிலால் அல்-மினுகி கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல்
லேக் சாட் (Lake Chad) படுகை பகுதியில் நடத்தப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கை, ஆபிரிக்காவில் எதிர்கால பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த முன்மாதிரி என்று ஆபிரிக்க பாதுகாப்புத் தலைவர்கள் மாநாட்டில் அமெரிக்க ஜெனரல் டாக்வின் ஆண்டர்சன் பாராட்டியுள்ளார்.
இராணுவ நடவடிக்கை முடிவடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ள போதிலும், நைஜீரிய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தீவிரவாதிகள் குறித்த உளவுத்துறை தகவல்களைப் பகிர்வது மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளை வழங்குவது போன்ற கூட்டுப் பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்து வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த கூட்டுத் தாக்குதல் மூலம் நைஜீரியாவில் உள்ள உள்ளூர் ஐஎஸ்ஐஎஸ் தலைவர்கள் மட்டுமின்றி, உலகளாவிய அளவில் அவர்களின் தகவல் தொடர்புகளும் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளன.
இந்த வெற்றிகரமான இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து, நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பல ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து சரணடைந்து வருவதுடன், அந்த அமைப்பிலிருந்து வெளியேறி வருவதாகவும் அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.