ஹோர்முஸ் நீரிணை தடையை தளர்த்திய அமெரிக்கா: ட்ரம்பின் விமர்சனத்தால் மீண்டும் வெடித்த சர்ச்சை!
மத்திய கிழக்கில் போர் தொடங்கி நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய இராணுவம் ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க - பிரித்தானிய கூட்டுத் தளமான டியாகோ கார்சியாவை இலக்கு வைத்துப் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த இக்கட்டான சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கிற்கு மேலும் 2,500 கடற்படை வீரர்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் விமர்சனம்
ஹோர்முஸ் நீரிணையைத் திறந்து வைக்கத் தயக்கம் காட்டும் நேட்டோ (NATO) நாடுகளை "கோழைகள்" என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தப் போரினால் மசகு எண்ணெய் விலை 50% வரை உயர்ந்துள்ளதால், உலகப் பொருளாதார அதிர்ச்சியைத் தவிர்க்க ஈரான் மீதான எண்ணெய் தடைகளை 30 நாட்களுக்கு அமெரிக்கா தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது.
போர் ஒருபுறம் தீவிரமடைந்தாலும், தனது இலக்குகள் நிறைவேறி வருவதாகவும், விரைவில் இராணுவ நடவடிக்கைகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்க மக்கள் இந்தப் போர் ஒரு பெரிய அளவிலான நிலப்பரப்புப் போராக மாறுமோ என்று அச்சமடைந்து வருகின்றனர்.