யாழ். தங்குவாய்க்கால் ஊடான நீரோட்ட தடை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறைக்கு, கீழ் கடலில் இருந்து தங்குவாய்க்கால் ஊடாக செல்லும் நீரோட்டம் தடைப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து அம்பாள் கடற்றொழிலாளர் சங்கம் கோரிக்கை ஒன்று முன்வைத்துள்ளது.
குறித்த தடைகளை நீக்கினால் மீன் உற்பத்திகள் அதிகரிக்கும் என பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் இராஜச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேற்று முன்தினம் (30.12.2025) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த விடுதலைப் புலிகளுடன் போர் தொடுக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை: பாட்டலியின் பரபரப்பான அறிவிப்பு
அழிந்து வரும் கடற்றொழில்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த முறை இறால் உற்பத்தியானது 10 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. வழமையாக மாரி காலத்தில் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளுகின்ற எங்களுக்கு இந்த முறை எதுவும் கிடைக்கவில்லை.

இதற்கு காரணம், தடை செய்யப்பட்ட தொழில் முறைகளே. தடைச் செய்யப்பட்ட தொழில் முறைகள் குறித்து பலமுறை கடற்றொழில் அமைச்சரிடம் கூறியிருந்தோம்.
அவர், எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் தடை செய்யப்பட்ட தொழில்களை அகற்றுவதாக உத்தரவாதமளித்தார். ஆனால் இதுவரையில் இந்த விடயம் தீர்க்கப்படவில்லை.
எங்கள் பகுதியில் 10 கடற்றொழில் சங்கங்கள் உள்ளன. அவற்றில் 4 சங்கங்கள் தரவைக் கடலை நம்பியும், 10 சங்கங்கள் ஆழ்கடலை நம்பியும் தொழில் செய்கின்றன.
ஆழ்கடல் தொழில் செய்யும் கடற்றொழிலாளர்களின் வலைகள் உள்ளிட்ட தொழில் முதல்கள் இந்தியன் இழுவைப் படகுகளால் நாசம் செய்யப்படுகின்றன. 50 ரோலர்கள் வந்தால் கடற்படையினர் ஒரு ரோலரையே பிடிக்கின்றனர்.
வாக்குறுதியளித்த அதிகாரி
அவர்களது கப்பல் பெரிய கப்பல்கள் என்றும், அதனை பிடிப்பதற்கு பெரிய கப்பல்கள் தங்களிடம் இல்லை என்றும் கடற்படையினர் கூறுகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகளால் படிப்படியாக கடற்றொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவடைதல், அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லல், அந்த பிரதேசங்களை விட்டு செல்லல் போன்ற துன்பியல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இப்படி கடற்றொழிலாளர் வர்க்கமே இல்லாமல் போகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது" என கவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நீரியல் வள திணைக்கள அதிகாரி கருத்து தெரிவிக்கையில், அந்த பாலத்தில் இருந்து 50 மீட்டர்கள் தொலைவில் கொடி கட்டினோம். அதற்குள் எவரும் வலை விட வேண்டாம் என்று நாங்கள் சங்கங்களுக்கு கடிதமும் வழங்கியுள்ளோம். அப்படி இருந்தும் அதற்குள் வலைகளை விடுகின்றார்கள்.
கடந்த நவம்பர் மாதம் தான் பருவகாலம். ஆகையால் நவம்பர் மாதம் அங்கு இருக்கின்ற வலைகளை அகற்றுவதற்கு திட்டமிட்டோம். இருப்பினும், டிட்வா புயலால் அந்த வலைகளை அகற்ற முடியவில்லை. ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களுக்குள் இவற்றை சீர் செய்வோம் என வாக்குறுதி அளித்துள்ளார்.