தண்ணீரூற்று பூதன்வயல் இணைப்பு வீதியில் மேற்கொள்ள வேண்டிய அவசர தேவை
தண்ணீரூற்று பூதன்வயல் இணைப்பு வீதியொன்றில் உடனடியாக கருத்தில் எடுத்து செயற்படுத்த வேண்டிய தேவை ஒன்று எழுந்துள்ளது.
ஆயினும் அது தொடர்பில் உரிய தரப்புக்கள் கவனமெடுக்குமா என்ற கவலை இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
கனரக வாகனங்களின் பயன்பாடுள்ள இந்த வீதியின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வது தொடர்பிலேயே மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
கொங்கிறீற்று வீதியாக இருக்கும் குறித்த வீதி குன்றும் குழியுமாக மாறி வருவதனை தடுக்கும் நோக்கிலான செப்பனிடல் பணிகளை உடன் ஆரம்பிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளனை அவதானிக்கலாம்.
எனினும் அது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.பாரியளவிலான சேதங்களை அடையும் வரை காத்திருக்காது உடன் செப்பனிடுவதே சாலைப் பொருத்தமாகும்.
இணைப்பு வீதி
தண்ணீரூற்று குமுழமுனை வீதியில் புதன்வயல் சந்தியில் இருந்து ஆரம்பப்பமாகும் இந்த சீமெந்து வீதி முல்லைத்தீவு மாங்குளம் வீதியினை பால் பண்ணைச்சந்தி உடன் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.இது இணைப்பு வீதியாக இருப்பதோடு 1.4 கிலோமீற்றர் நீளம் கொண்டதாகவும் இருக்கின்றது.
மாமூலை மற்றும் புதன்வயல், முறிப்பு , குமுழமுனை மக்களை முல்லைத்தீவு நோக்கி பயணிப்பதற்கு முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இணைத்து விடும் குறுகிய பாதையாக இது இருக்கின்றது என்பதும் நோக்கத்தக்கது.
சீமெந்து வீதியாக அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் ஓரங்களை அணைத்து மண் இடப்படாததும் ஒரு குறையாக இருந்து வந்ததோடு இப்போது சீமெந்து வீதியின் மேற்பகுதியில் ஏற்பட்டுவரும் சேதம் அவ்வீதியை குன்றும் குழியுமாக மாற்றியபடி இருக்கின்றது.
பொருத்தமான உடனடிச் செப்பனிடல்களை மேற்கொள்ளாத விடத்து நாளடைவில் பாரிய சேதங்களை கொண்ட, பயணிக்க முடியாது வீதியாக இது மாறிப் போகலாம் என புதன்வயல் பகுதியில் பாரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வயோதிபர் சிலருடன் உரையாடிய போது அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நீண்ட காலம் கிரவல் வீதியாக இருந்த இது இப்போது கொஞ்சக் காலம் தான் சீமேந்து வீதியாக மாற்றப்பட்டு மக்கள் பண்பாட்டுக்கு கையளிக்கப்பட்டது என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
தொழிற்சாலைக்கான பாதை
பாரியளவிலான தொழில்திறனுடைய நெல்லரிசி ஆலை ஒன்றும் சிறியளவிலான அரிசி ஆலை ஒன்றும் இப்பாதையினை பயன்படுத்தியவாறு இருக்கின்றன.
பாரவூர்த்திகளின் அதிக பயன்பாட்டை இதனால் இந்த வீதி கொண்டுள்ளதோடு டிப்பர் ரக வாகனங்களும் மண் மற்றும் கல்லோடு இந்த வழியில் பயணிப்பதை யும் சுட்டிக்காட்டலாம்.
சீமெந்துக் கல் உற்பத்தி ஆலை ஒன்றும் இந்த வீதியில் இருக்கின்றது.அதன் தொழிற்பாட்டுக்கான மணல் மற்றும் சல்லிக்கற்களை எடுத்துச் செல்ல வரும் வாகனங்களாலும் விற்பனைக்குள்ளாகும் கற்களை ஏற்றிச் செல்ல உதவும் வாகனங்களாலும் அதிகளவில் பயன்படுத்தப்படும் பாதையாக இருப்பதும் நோக்கத் தக்கது.
பாதையின் மொத்த நீளத்தில் பல இடங்களில் குன்றும் குழியுமாக இருப்பதோடு இன்னும் பல இடங்களில் சீமெந்து சேய்வடைந்துள்ள நிலையில் அவ்விடங்களிலும் குழிகள் தோன்றும் நிலை இருப்பதையும் இனங்கண்டு கொள்ள முடிவதும் குறிப்பிடத்தக்கது.
பொறிமுறை செலவுகள்
இத்தகைய பயன்பாடு மிக்க வீதிகளின் செப்பனிடல் மற்றும் பராமரிப்புத் தொடர்பில் வரும்முன் காத்தல் பொறிமுறை செலவுகளை மிகையாக குறைத்து விடும் என சமூக விடய கற்றலாளர் குறிப்பிடுகின்றார்.
விரைவாக பழுதடையும் பாதைகளில் செப்பனிடல் காலங்களை கருத்தில் எடுத்து உரிய காலங்களில் செப்பனிடல்களை செய்து வரும் போது பாரியளவிலான சேதங்களை அத்தகைய வீதிகள் குறுகிய காலத்தில் பெற்றுவிடாது.
அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் வீதிகள் தொடர்பில் பொது மக்கள் சார்ந்த அமைப்புக்களும் செப்பனிடல் தொடர்பில் கவனமெடுத்துச் செயற்பாடுகளில் ஈடுபடும் போது வீதிகளின் பராமரிப்பும் பேண்தகு பயன்பாடும் அதிகரிக்கும் என்பது திண்ணம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |