கோவிட் தொற்று அதிகரிப்பு தொடர்பில் மன்னாரில் அவசர கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணங்களை ஆராய்வதற்காகவும், எவ்வாறு மாவட்டத்தில் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தி கோவிட் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும் என்பது தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடல் இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் பிரதேசச் செயலாளர்கள்,சுகாதாரத் துறையினர், பொலிஸ், இராணுவ அதிகாரிகள், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதிக அளவான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் மீன் பிடி தொழிலில் ஈடுபடுகின்றவர்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் குறிப்பாக வெளி மாவட்டங்களில் ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுகின்றவர்களிடமும் குறித்த தொற்று காணப்பட்டமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறித்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கைகளுக்கான மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதோடு, நாட்டில் பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் மக்கள் அதிகமாக ஒன்று கூடுவதனை தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில், அவர்களைப் பயன்படுத்தி மக்கள் ஒன்று கூடுவதைத் தடுப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டன.
பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் இளைஞர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, அவர்களுக்கான பாதுகாப்பு உடைகளை வழங்கி அவர்கள் மூலம் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் செயல்பாட்டை மேற்கொள்ள ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த செயல்பாட்டை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வருவது குறித்தும் ஆராயப்பட்டதோடு, குறித்த செயல் பாட்டிற்கு விரும்பிய , கட்டுக்கோப்புடன் சுகாதார நடை முறைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய இளைஞர், யுவதிகளைத் தன்னார்வத் தொண்டர்களாக இணைத்துக் கொள்ள எதிர் பார்க்கப்பட்டுள்ளது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.