வரலாற்றுச் சாதனை பக்தர் வருகை! கச்சதீவில் நிலவிய அசாதாரண சூழல்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இந்த முறை வரலாற்றுச் சாதனையாக 13 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்புடன் நிறைவடைந்தது.
இருப்பினும், திருவிழா நிறைவு பெற்று பக்தர்கள் கச்சதீவிலிருந்து வெளியேற முற்பட்ட போது பாரிய சனநெரிசல் ஏற்பட்டுள்ளது.
சனநெரிசலால் பக்தர்கள் அவதி
நேற்று(28) இடம்பெற்ற கூட்டுத் திருப்பலியைத் தொடர்ந்து, ஒரே நேரத்தில் பெருமளவு பக்தர்கள் தத்தமது ஊர்களுக்குத் திரும்புவதற்காகப் படகுத் துறையை நோக்கி விரைந்துள்ளனர்.

பெருமளவு மக்கள் ஒரே இடத்தில் திரண்டதால், படகு ஏறும் பகுதியில் நீண்ட வரிசைகளும் தள்ளுமுள்ளு நிலையும் காணப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தந்த பக்தர்கள் அனைவரும் குறுகிய காலப்பகுதிக்குள் கச்சதீவிலிருந்து வெளியேற முயன்றமையே இந்த நெரிசலுக்குப் பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது.
கடற்படையினர் கடும் முயற்சி
கடும் வெயிலுக்கு மத்தியில் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இந்த நெரிசலால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். கடற்படையினர் நிலைமையைக் கட்டுப்படுத்தப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இந்த முறைத் திருவிழாவானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் தலைமையில் திருப்பலிகள் இடம்பெற்றன. இலங்கை மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பு உயர் அதிகாரிகள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ராகேஷ்