அமெரிக்கா, கனடாவில் இருந்து இலங்கை வந்த மர்ம பொதிகள்
கூரியர் பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
சர்வதேச எக்ஸ்பிரஸ் கூரியர் சேவை மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கொக்கைன், குஷ் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களே கைப்பற்றப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அமெரிக்கா, கனடா மற்றும் மலேசியாவிலிருந்து கொழும்பு கார்கோ எக்ஸ்பிரஸ் பெற்ற போதைப்பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பல கூரியர் பார்சல்களை, இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு பகுப்பாய்வு செய்து தடுத்து வைத்துள்ளது.
மர்ம பொதிகள்
நீண்ட காலமாக பார்சல்களுக்கு எவரும் உரிமை கோரமையினால் அது தொடர்பில் பரிசோதனைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25ஆம் திகதியன்று, இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவை சேர்ந்த சுங்க அதிகாரிகள் பார்சல்களைத் திறந்து ஆய்வு செய்தனர்.
மேலும் பரிசோதனையின் போது, பார்சல்களுக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
போதைப்பொருட்கள்
அதற்கமைய, 1,101 கிராம் கொக்கைன், 1,666 கிராம் குஷ் மற்றும் நான்கு குப்பிகள் கஞ்சா எண்ணெய் ஆகியவை அவற்றில் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு 60 மில்லியன் ரூபாயாகும்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.