வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை : நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரினார் தவிசாளர் (Video)
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வசமுள்ள, வேலணை பிரதேச சபை விசேட அமர்வு இன்றையதினம் தவிசாளர் நவசிவாயம் கருணாகர குருமூர்த்தி தலைமையில் இடம்பெற்றிருந்தது.
பிரதேச சபைக்குச் சொந்தமான வேலணை வங்களாவடி கடைத் தொகுதியின் வேலைகளை முன்னெடுப்பதற்குச் சபையின் நிலையான வைப்பில் இருக்கும் நிதியினை மீளப்பெறுவதற்குச் சபை உறுப்பினர்களிடம் அனுமதியினை பெற்றுக் கொள்ளுவதற்காகவே இன்றைய விசேட கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
இதன்போது சபையின் தற்போதைய ஆட்சியாளர்களின் அசமந்த போக்கு காரணமாகவே வேலைகள் இதுவரை நிறைவடையவில்லை என உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
தொடர்ந்து உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட தவிசாளர் நடந்த தவற்றுக்கு மன்னிப்பு கோரியதை அடுத்து நிலையான வைப்பில் உள்ள நிதியினை மீளப்பெறுவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஏகமானதாக அனுமதி வழங்கியிருந்தனர்.
இரண்டு கட்டங்களாகக் கட்டுமான பணிகளை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டு அதில் முதலாவது கட்ட வேலைகள் கடந்த மாதம் 28 ஆம் திகதி நிறைவடையும் எனக் கூறப்பட்ட போதும் இன்றுவரை நிறைவடையாமல் இருக்கின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள விலையேற்றம் காரணமாகவே வேலைகளை முழுமையாக முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதும் அதனை சில உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளாததால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இன்றைய சபை அமர்வுக்கு ஊடகவியலாளர்கள் சென்றபோது விசேட அமர்வுகளுக்கு
ஊடகவியலாளர்களை அனுமதிக்க முடியாது என தவிசாளர் உள்ளிட்ட சில உறுப்பினர்கள்
கூறியிருந்தார்.
தவிசாளரின் கருத்துக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து
ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



