முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டாமென கூறுவது அநீதி! அதாவுல்லா
அரசாங்கத்தின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லா, கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமளிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஆளும் கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அதாவுல்லா இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக விபரித்த பின்னர், எழுந்த அதாவுல்லா,
முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதே தற்போதுள்ள பிரச்சினை எனவும்,இந்த பிரச்சினையின் ஊடாக சமூக, சமய மற்றும் அரசியல் ரீதியான பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சரிடம் கூறியுள்ளார்.
முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடமளிக்க வேண்டாம் என கூறுவது முஸ்லிம் மக்களுக்கு செய்யும் அநீதி எனவும் அதாவுல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சரான அதாவுல்லா, இந்த பிரச்சினை தொடர்பாக இதுவரை பகிரங்கமாக எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.