யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்
பணியாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவர் எந்தவொரு பாடநெறிக்கும் விரிவுரைகளை மேற்கொள்ளாத போதிலும் 19 மாதங்களாக 13 மில்லியன் ரூபாய் கொடுப்பனவு
வழங்கப்பட்டுள்ளதாக தாவரவியல் துறை முன்னாள் தலைவர் மனிதவுரிமை ஆணைக்குழுவின்
யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக தாவரவியல் துறையில் பணியாற்றும் பெண் விரிவுரையாளர்
எந்தவொரு பாடநெறிக்கும் விரிவுரைகளை மேற்கொள்ளாத போதிலும் துறைத்தலைவரின்
அறிவுறுத்தலை மீறி 19 மாதங்களாக அவருக்கான கொடுப்பனவாக 13 மில்லியன் ரூபாய்
வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை வெளிப்படுத்தியமையால் தான் பழிவாங்கப்பட்டு
வருவதாக துறைத்தலைவர் பேராசிரியர் கபிலன் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
பதிவு செய்துள்ளார்.
அதேவேளை அதிபர், பிரதமர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, உள்ளக கணக்காய்வு
திணைக்களம் மற்றும் இலஞ்சம் ஊழல் ஒழிப்பு திணைக்களம் என்பவற்றிலும்
முறையிட்டுள்ளார்.
முறைப்பாட்டின் சாராம்சமானது, குறித்த விரிவுரையாளர் ஐந்து ஆண்டுகளுக்கு
முன்னர் மருத்துவ சுகவீன விடுமுறையை தனது சுய விருப்பின் பேரில்
எடுத்திருந்தார்.
பின்னர் எந்தவிதமான ஆட்சேர்ப்பு நடைமுறையையும் பின் பற்றாது, மருத்துவ பரிசோதனைக்கு கூட உட்படுத்தாது, ஒழுங்கு முறைகளை மீறி இரு
ஆண்டுகளுக்கு சம்பளத்துடன் கூடிய ஏழாட்டை விடுமுறை (சபாட்டிக்கல் லீவு)
வழங்கப்பட்டது.
குறித்த விரிவுரையாளர் 19 மாதங்களாக எந்த வேலையும் செய்யாத போதிலும், சம்பளம்
மற்றும் ஆராய்ச்சி கொடுப்பனவு என்பன துணைவேந்தரால் வழங்கப்பட்டு வருகிறது.
இவை
தொடர்பில் பிரதமர் மற்றும் அதிபருக்கு முறையிட்டமையால் , கடந்த மாதம் 27ஆம்
திகதி "தொடர்பாடல் நெறிமுறை மீறல்" என குற்றம் சாட்டி துறைத்தலைவர் பதவியில்
இருந்து என்னை பணிநீக்கம் செய்துள்ளார்.
எந்த குற்றமாக இருந்தாலும்,
குற்றப்பத்திரிகை வழங்கி விளக்கம் கேட்டு, அது திருப்தி இல்லை எனில் விசாரணை
நடாத்தி அதில் குற்றவாளியாக கண்டாலே பதிவு நீக்கம் செய்ய முடியும்.
ஆனால் அவை
எதுவும் இன்றி பதிவு நீக்கம் செய்துள்ளனர்.
வேலை செய்யாதவருக்கு, சட்டரீதியற்ற முறையில் 13 மில்லியன் கொடுப்பனவு
வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தமையால், நீதிவரைமுறைக்கு உட்படாது
என்னை முறையற்ற ரீதியில் பழிவாங்கும் முகமாக பதவி நீக்கம் செய்துள்ளனர். என
மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,