ஐ.தே.கவுடனான தொடர்புகளை நிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு - ரெஹான் ஜயவிக்ரம
ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கட்சித் தலைவராக இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியுடனான தொடர்புகளை நிறுத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான, ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக கட்சியின் செயற்குழு உறுப்பினர் ரெஹான் ஜயவிக்ரம (Rehan Jayawickrama) இதனை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக இருக்கும் வரை, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்காது என்று, தமது கட்சியின் செயற்குழு பலமுறை வலியுறுத்தியுள்ளதாகவும் ஜெயவிக்ரம கூறியுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தினுக் கொலம்பகே (Dhinuk Kolambake), தமது கட்சி மாற்றத்திற்கு உள்ளாகி வருவதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புச் செயலாக்கத்தின் போது ரணில் விக்ரமசிங்கவையே கட்சித் தலைவராக தொடர முடிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் விளையாட்டை நிறுத்தி, பொது மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



