பதில் பிரதிப்பொலிஸ் மா அதிபர்களாக பெண்கள் நியமனம்! - ஐநா பாராட்டு
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பெண்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கர் இதனை தெரிவித்துள்ளார்.
மூன்று பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வு சமத்துவத்தின் அவசியத்தை அங்கீகரிப்பதுடன், சட்ட அமுலாக்கத்தில் பெண்களின் பங்களிப்பு ஒரு முக்கியமான படியாகும் என்று அவர் கூறியுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
Congratulations to the 3 women promoted to Acting DIGs, an important step towards recognizing need for equality & contribution of women to law enforcement. Full & effective participation of women across all ranks leads to a more effective response to #GBV & measured use of force. pic.twitter.com/136Wi8c9oe
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) October 8, 2021
"சட்ட அமுலாக்கத்தில் பெண்களின் சமத்துவம் மற்றும் பங்களிப்பின் அவசியத்தை அங்கீகரிக்கும் ஒரு முக்கியமான படியாக, பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு பெற்ற மூவருக்கு வாழ்த்துக்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக கடமையாற்றி வந்த ஏ.ஆர். ஜயசுந்தர, என்.டி. செனவிரட்ன மற்றும் டபிள்யூ.ஜே. பத்மினி ஆகியோர் பதில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் தற்பொழுது நான்கு பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.