இலங்கை தொடர்பில் சர்வதேச அரங்கில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு:மௌனம் காக்கும் அரசாங்கம்! ஏரான் விக்கிரமரத்ன கேள்வி
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச அரங்கில் இலங்கையில் இடம்பெற்ற பொருளாதாரக் குற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும் போதும், தண்டனையில்லா குற்றச்சாட்டை முன்வைக்கும் போதும் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் மௌனமாக இருப்பது ஏன் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்கிரமரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முதன்முறையாக நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார குற்றங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் அமர்வில் சுமத்தப்பட்டுள்ள பொருளாதார குற்றம்
நல்லாட்சி காலத்தில், காணாமற்போனோருக்கான நட்டஈடு அலுவலகம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டதுடன், யுத்தத்தின் போது கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீள கையளித்தல் உட்பட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
எனினும் கடந்த சில வருடங்களாக ராஜபக்சவின் அரசாங்கத்தின் போது இவற்றில் பல பின்வாங்கப்பட்டுள்ளன. அத்துடன் இம்முறை ஐக்கிய நாடுகள் அமர்வில் பொருளாதார குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் சில அரச அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் கண்காணிக்கப்படும் என அரசாங்கம் சில வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுயாதீனமாக அமைக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும், அந்த சட்டங்கள் முன் கொண்டுவரப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ஏரான் குறிப்பிட்டார்.
நிதிக்குற்றங்கள்
எவ்வாறாயினும், நிதிக் குற்றங்களைக் கையாள்வதற்கு அந்தச் சட்டங்கள் மட்டும் போதாது என எரான் சுட்டிக்காட்டினார்.
நிதிக்குற்றங்கள் என்பது ஆளும் கட்சியின் தலைவர்கள், ஜனாதிபதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் சொத்துக்களை திருடி நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ மறைத்து வைத்துள்ளனர்.
திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது தொடர்பிலான சட்டத்தை கொண்டு வருமாறு இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.இது முற்றிலும் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் மோசடி செய்பவர்களை பாதுகாக்கும் நிலையில் சர்வதேச சமூகத்துடன்
இலங்கை இணக்கம் காண முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.