போலி அழைப்புகளைப் பயன்படுத்தும் பாதாள உலகக் கும்பல்கள்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் வெளிசத்திற்கு வந்த உண்மை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள், அழைப்பவரின் அடையாளத்தை மறைக்கும் வகையிலான நவீன தொழில்நுட்ப முறையில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அதன் பிரகாரம் குற்றக் குழுக்களின் முக்கியஸ்தர்கள் இன்னொரு நபரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளும்போது, அழைப்பைப் பெறுபவருக்கு ஒரு போலி தொலைபேசி எண் காட்டப்படுவதுடன், உண்மையான தொலைபேசி இலக்கம் மறைக்கப்படும் நவீன தொழில்நுட்பமொன்றை கைக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இந்தச் செயற்பாடு குறித்து ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இவ்வாறான தொலைபேசி அழைப்பு முறை குறித்த தகவல்கள் முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்தது.

'2019 ஏப்ரல் 21 தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த வெளியான உண்மைகள்' என்ற தலைப்பின் கீழ், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க அனுப்பிய 20 மே 2019 திகதியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாதாள உலகக் கும்பல்கள்
அந்தக் கடிதத்தின்படி, தாக்குதல்களுடன் தொடர்புடைய நபர்கள், போலி அழைப்பாளர் அடையாள விவரங்களைப் பயன்படுத்தி 39 தொலைபேசி எண்களிலிருந்து அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடைமுறை தொடர்பான மேலதிக தகவல்கள், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சம்பந்தப்பட்ட விசாரணைகளின் போது வெளிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடைய ஒரு புலனாய்வு அதிகாரி, குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) அளித்த வாக்குமூலத்தின்படி, சலே மேற்கொண்டதாகக் கூறப்படும் அழைப்புகளுடன் தொடர்புடைய தொலைபேசி எண்களுக்கு மீண்டும் அழைக்க முடியவில்லை.
அழைப்புகளின் மூலத்தை மறைப்பதற்காகப் போலித் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தியது குறித்த ஏராளமான விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளதால், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய தொலைபேசித் தொடர்புகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை ஒரு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.