ஐ.பி.எல் 2026 இறுதிப் போட்டி - கிண்ணம் யாருக்கு..!
19ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 28ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பமானது.
10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த இரண்டு மாதங்களாக ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டிகளை வழங்கி வந்தது.
ஐ.பி.எல் இறுதிப் போட்டி
லீக் சுற்று மற்றும் பிளே-ஓப் ஆட்டங்களின் நிறைவில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இதன்மூலம் ஐபிஎல் 2026 சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப்போட்டி இன்று (31) நடைபெறவுள்ளது.
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.
நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் களமிறங்குகிறது.
அணித்தலைவர் மற்றும் முக்கிய வீரர்களின் அபார ஆட்டம் காரணமாக இந்த தொடரிலும் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கிண்ணம் யாருக்கு
மறுபுறம், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் கிண்ணத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் நோக்கில் இறுதிப்போட்டியில் களமிறங்குகிறது.
இந்த தொடரில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் குஜராத் அணி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.

இரு அணிகளிலும் போட்டியின் போக்கை மாற்றக்கூடிய நட்சத்திர வீரர்கள் இருப்பதால், இறுதிப்போட்டி கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரின் இறுதியில் வெற்றிக்கிண்ணத்தை உயர்த்தப்போவது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவா அல்லது குஜராத் டைட்டன்ஸா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரியவரவுள்ளது.