விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..!
இலங்கைத்தீவு வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் தென்னிந்திய செல்வாகிற்கு உட்பட்டே வந்திருக்கிறது. இந்தியாவில் ஏற்படுகின்ற அரசியல், பண்பாட்டு, பொருளியல், தொழில்நுட்ப, அறிவியல் வளர்ச்சிகள் என அனைத்து அம்சங்களும் ஏற்படுகின்ற மாற்றங்கள் இலங்கை தீவை நோக்கிய பாய்ச்சலை ஏற்படுத்தி இந்தியச் செல்வாக்கிற்குள் அமிழ்த்தியுள்ளது.
அது மகிந்ததேரர் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே பௌத்தத்தை தென்னிந்திய தமிழர்கள் இலங்கையின் வடபகுதிக்கு வழங்கிவிட்டார்கள் என்ற வரலாற்று உண்மையில் இருந்து இன்றைவரையான இயங்கு போக்காகவுள்ளது.
இலங்கைமீது அரசியலிலும், பொருளியலிலும், பண்பாட்டு படையெடுப்புத்தாக்கங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளன.
அதனை கண்முன்னான சாட்சியமாக இப்போது தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் பெற்ற வெற்றியும், அதன் பின்னான இலங்கைத் தீவில் தமிழர் தரப்பிலும், சிங்கள மக்கள் மத்தியிலும் சிங்கள ஊடகங்கள், நாடாளுமன்றம் வரைக்கும் தாக்கம் செலுத்துவதைக் காண முடிகின்றது.
அந்த அடிப்படையில் தமிழகத்தின் அரசியல் செல்போக்கு மாற்றம் இலங்கை தீவில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தியுள்ளது என்பது பற்றி பார்ப்போம்.
முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்
முதலாவதாக இங்கே தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதை கொண்டாடுவதோ அல்லது அந்த கட்சிக்கு சார்பான கருத்துக்களாக இதனைப் பார்க்காது தென் இந்தியாவில் ஏற்படுகின்ற மாற்றங்கள் எவ்வாறு இலங்கை தீவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது? அது எவ்வாறு தமிழ் மக்களுடைய மனங்களிலும், தமிழ் மாணவருடைய மனங்களிலும் எத்தகைய தாக்கத்தை செலுத்தி இருக்கிறது? அதே நேரத்தில் சிங்கள அரசியல்வாதிகளிடமும், ஊடகவியலாளர்களிடம், புத்திஜீவிகளிடமும் ஏற்பட்ட ஏற்பட்டிருக்கின்ற மன எழுச்சி சார்ந்த இந்த விடயம் அணுகப்படுகிறது என்பதை கருத்தில் கொள்க.
தேர்தல் பரப்புரைகளின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒரு கட்டத்தில் "ஈழத்தில் தலைமை இழந்திருக்கும் உறவுகளுக்கு நாம் பக்கபலமாகவும் உறுதியாகவும் இருப்போம்" என குறிப்பிட்டிருந்தார்.
அதே வேளையில் “தமிழக கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை தாம் எதிர் கொண்டு தீர்ப்போம்“ எனவும் கச்சதீவு விவகாரம் பற்றியும் குறிப்பட்டிருந்தார்.
வெற்றி அடைந்து தமிழக முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய் அமர்ந்த கையோடு ஈழத் தமிழர்களின் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட 17ம் ஆண்டு நினைவு வந்துவிட்டது. மே18ல் " முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் தமிழ் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!" என தனது முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி நிகழ்வில் குறிப்பிட்டார்.
இன்றைய தமிழக அரசியலில் ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்த கையோடு இவ்வாறு அந்த தமிழக புதிய அரசாங்கம் தனது கருத்தை முன்வைப்பது என்பது ஈழத் தமிழர்கள் சார்ந்த ஒரு முக்கிய நிகழ்வாகவே பார்க்கப்பட வேண்டும். மேற்படி தமிழகத்திலிருந்து வந்த இந்தச் செய்தி சிங்கள தேசத்தின் அடிவயிற்றில் புளியைக் கரைத்து விட்டது என்பதுதான் உண்மை.
இதனால் சிங்கள அரசியல் தலைமைகளும், ராஜதந்திரிகளும், ஊடகவியலாளர்களும் தமது கொதிப்பை வெளிப்படுத்த தவறவில்லை. இலங்கை அரசுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் அவரை புலியென முத்திரைகுத்தி பேசுவது சிங்கள தேசத்தின் இயல்பான குணாம்சம்.
அது எப்போதும் மாறப்போவதில்லை. எனவே சிங்கள தேசத்திற்கு எப்போதும் நிரந்தர எதிரியாக இருப்பது புலியும், இந்தியாவும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இப்போது தமிழக வெற்றி கழகத்தின் ஈழத் தமிழர் தொடர்பான நிலைப்பாடு கடந்த காலங்களை விட நெருக்கமானதாகவும், ஆதரவை கொடுக்கக்கூடிய அளவுக்கு நெருங்கி வருகிறது.
கடந்த கால கசப்புக்களையும், தவறுகளையும் கடந்து புதிய உறவுகளை பலப்படுத்த வேண்டியது ஈழத் தமிழருடைய கைகளிலேயே உள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சினை
அதனை அறிவார்ந்து அறிவியல் தகுதி வாய்ந்தவர்கள் ஊடாகவே தமிழக அரசியலை அணுகவும், உறவாடவும் ஈழத் தமிழர்கள் தயாராக வேண்டும். தாயகத்தில் உள்ள அரசியல்க் கட்சிகள் இந்த விடயத்தில் அறிவார்ந்து செயற்பட வேண்டியது அவசியமாகிறது.
இந்தியா தொடர்பான அரசியலை முன்னெடுப்பதற்கு அறிவார்ந்த புத்திஜீவிகளை நியமிப்பதை விடுத்து தாமே இந்தியாவில் காலடி எடுத்து வைப்பதை தவிப்பது மிக மிக முக்கியமானது.
ஏனெனில் அரசியல் ராஜதந்திர மற்றும் வரலாற்று அறிவற்ற நபர்கள் இலங்கை நாடாளுமன்றத்துக்குள் செல்வதும், ஈழத் தமிழர் பிரச்சினையை இலங்கை நாடாளுமன்றத்துக்குள்ளால் கையாண்டதன் விளைவும் கடந்த 17 ஆண்டுகளாக தமிழ அரசியல் பரப்பில் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை.

மாறாக இருந்ததை கெடுத்த கொல்லி கண்ணன்களாகவே தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளார்கள். ஆகவே இனியாவது தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கின்ற ஒரு வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டியது அவசியமானது.
வாய்ப்புக்கள் வரலாற்றில் அவ்வப்போதுதான் வரும். இப்போது இந்த சமுத்திர அரசியலிலும், பார்க்குநீரினை அரசியலிலும் புதிய அத்தியாயம் தொடங்கி இருக்கிறது.
இந்த புதிய அத்தியாயத்தில் ஈழத் தமிழர்கள் புதிய வியூகங்களை வகுத்து, புதிய உறவுகளை வளர்த்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும், பேரம் பேசல்களையும் முற்றிலும் அறிவுபூர்வமாக முன்னெடுக்க புத்திஜீவிகளையும் கல்விமான்களையும் அறிவார்ந்தவர்களையும் உள்ளடக்கிய ஒரு தமிழ் மக்கள் தேசிய மகா சபையை உருவாக்கி வேண்டும்.
அதுவே தமிழ் மக்களுடைய வெளிவிவகார கொள்கை சார்ந்தும், சர்வதேச அரசியல் சார்ந்தும், பூகோள அரசியல் சார்ந்த முடிவுகளை எடுத்து, தேசமாகத் திரண்டு அரசாக தொழிற்பட வேண்டியது அவசியமானது.
"அண்டை நாடு இயல்பான எதிரி அண்டை நாட்டின் அண்டை நாடு இயல்பான நண்பன்" என்ற சாணக்கியனின் ராஜதந்திர பரிபாசை ஈழத் தமிழர்களின் சர்வதேச அரசியலுக்கு மிக முக்கியமான அரிச்சுவடி. இப்போது தமிழக அரசுக்கு எதிராக சிங்கள தேசத்திலும், சிங்கள நாடாளுமன்றத்திலும் குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கிவிட்டது. இது தமிழ் மக்களுக்கு நலனை விளைவிக்க கூடிய போக்குதான்.
இவ்வாறு நாமும் எதிரிக்கு ஏற்படுகின்ற இடைவெளிகளை அதிகரிக்கச் செய்யவும், எமது இடைவெளிகளை நெருங்கச் செய்யவேண்டியது அவசியமானது. தமிழகத்தின் மீது எந்தளவு சிங்கள தேசம் எதிர்ப்பை காட்டுகிறதோ அந்த அளவு தூரம் தமிழகம் ஈழத் தமிழர்களுடன் நெருங்கும்.
அவ்வாறே தமிழக அரசு ஈழத் தமிழர்களை நெருங்கி வருகின்ற போது இந்திய மத்திய அரசும் ஈழத் தமிழர்களை நெருங்கி வருவது தவிர்க்க முடியாது "குட்டி ஆடு உறவானால் தாய் ஆடு உறவாக வேண்டியது அவசியம் தானே" இப்போது அதனை முன்னேற்றி செல்வதும் ஈழத் தமிழர்களின் கைகளிலேயே உள்ளது.
அதே நேரத்தில் சிங்கள தேசத்தில் தமிழகத்தின் ஆட்சி மாற்றம் தமக்கு ஆபத்தானது என்பதை உணரப்படுகிறது. ஆனால் ஈழத் தமிழர் தரப்பில் இந்த விடயம் உணரப்பட்டதாக தெரியவில்லை.
விஜய் அபிமானத்துக்குரிய நடிகர்
இது பல்வேறுபட்ட எதிர் முரண் கருத்துக்களை பேசுவதிலும், தனிநபர் விருப்பு வெறுப்புகளை பொது அரசியல் நிலைப்பாடாகப் பேசுவதிலும் சில குழுக்கள் ஈடுபட்டிருப்பது ஈழத் தமிழர்களுக்கு ஆரோக்கியமானதல்ல.
ஆயினும் இதனை அப்படியே விட்டுவிட்டு புதிய பாதைக்கு செல்வதுதான் அறிவார்ந்த செயலாகும்.
அதே நேரத்தில் தமிழக அரசியலின் தாக்கம் எவ்வாறு ஈழத் தமிழர்கள் பொதுபரப்பிலும், சிறுவர்கள், மாணவர்கள் மத்தியிலும் ஏற்பட்டு இருக்கிறது என்பதை மிகவும் கவனமாக நாம் ஆராய வேண்டும்.
ஈழத் தமிழ் பரப்பில் விஜய் அபிமானத்துக்குரிய நடிகராக பெருமளவிலான மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கிறார் என்பது உண்மைதான்.
ஆனால் இப்போது அரசியலிலும் அவர் இடம் பிடித்து விட்டார் என்பதை அண்மைக்கால தரவுகள் வெளிக்காட்டுகின்றன.

அதற்கு ஒரு சிறிய உதாரணத்தை இங்கே பதிவிடுவது சாலப் பொருத்தும் என நினைக்கிறேன்.
வவுனியா வடக்கு கல்வி வளையத்தின் தேசியப் பாடசாலையும், முன்னணிப் பாடசாலையுமான வ/புதுக்குளம் மகா வித்தியாலய அதிபர் கே.இளங்கோவன் தனது பாடசாலையின் பதினோராம் ஆண்டு மாணவர்களிடம் பொதுஅறிவு பாடம் பற்றிக் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது கேட்கப்பட்ட மாணவர்களின் பிரதிபலிப்புகளை இவ்வாறு என்னிடம் குறிப்பிட்டார்.
மாணவர்களிடையே உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது அவர்கள் விஜய் அண்ணா என பேசியது ஆசிரியரின் காதில் விழுந்தது அவர் குறித்த மாணவரிடம் விஜய் பற்றிய உங்களுக்கு என்ன தெரியும்? என்று கேள்வியை கேட்டார் அந்தக் கேள்விக்கு முண்டியடித்துக் கொண்டு மாணவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லத் தொடங்கினர்.
தமிழகத்தில் தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, சட்டமன்றத்துக்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை, சட்டமன்ற மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை, இப்போது கிடைத்திருக்கின்ற ஆதரவு எண்ணிக்கை மேலும் ஆதரவாக வரக்கூடிய எண்ணிக்கைகள் என அரசியல் ஆய்வுகள் தரக்கூடிய அனைத்து தரவுகளையும் அந்தச் சிறிய மாணவர்களிடமிருந்து பெற முடிந்தது என மிக ஆச்சரியமாக தெரிவித்தார்.
சிறார்களிடம் இத்தகைய அரசியல் பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டிருக்கிறது என்பதை வியந்து கொண்டு இரண்டாவது கேள்வியை அவர் தொடுத்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் எத்தனை ஆசனங்கள் உள்ளன? வடகிழக்கு தமிழர்களின் ஆசனங்கள் எத்தனை உள்ளது? என்ற கேள்வியை கேட்டார் ஆனால் ஒரு மாணவர்களுக்கும் அதற்கான விடை தெரியவில்லை என்பது பெரும் துயரத்தைத் தந்தது என்றார்.
அதே சமயம் மாணவர்களுக்கான இந்த வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வீதியால் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி சென்று கொண்டிருந்தது ஒரு மாணவன் என்ன சேர் கல்லுக்குயலுக்குள்ளால ஒரு கை தெரியுது அதை எங்கு கொண்டு போகிறார்கள்? என்று கேட்டான்.
அதற்கு கனத்த கனத்தோடு அந்த மாணவர்களுக்கு அதன் தார்பரியத்தை விளங்கப்படுத்தியதாக என்னிடம் விவரமாகச் சொன்னார்.
அதே சமநேரத்தில் அந்த மாணவர்களில் பெற்றோர் பாடசாலைச் சந்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிக்கொண்டிருந்தனர் என்பதையும் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் என் உள்ளத்தில் எழுந்த பல விதமான கேள்விகளை, ஐயங்களை நேரடியாக எனது நெருங்கிய ஆசிரியர் நண்பர்களின் அனுபவங்களுடாக பெற்றுக் கொள்வதற்கு விரும்பினேன்.
தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எனது நண்பர்கள் பலர் அதிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் உள்ளனர். அவர்களிடமும் இவ்விடயம் சார்ந்து உரையாடிய போது ஏறத்தாழ அவர்களிடம் இருந்தும் இத்தகைய பதில்களே வந்தன.
மேற்குறிப்பிட்ட ஆசிரியர்கள் தங்கள் பெயர்களை பயன்படுத்த விரும்பாமையினால் அவர்களுடைய பெயர் பட்டியலை இங்கே தவிர்க்கிறேன்.
ஆயினும் அவர்கள் மாணவர்களுடைய உளவள பத்தியும், அவர்களுடைய சிந்தனை திறன் பற்றியும் என்னோடு பகிர்ந்து கொண்டவத்தை இங்கே பதிவு செய்வது அவசியமானது.
ஈழத் தமிழ் பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களுக்கு இலங்கை அரசியல் விவகாரங்களை பேசுவதை தடுக்கிறார்கள். அதை அவர்கள் விரும்புவதில்லை, தமது குழந்தைகள் கல்வியில் மாத்திரமே நாட்டம் கொள்ள வேண்டும் என்றும், பல்கலைக்கழகம் சென்று அதன் மூலம் ஒரு அரச உத்தியோகத்தை பெற்று விட்டால் போதும் என்பதுமே பெரும்பாலானுடைய விருப்பாக உள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் வெற்றி
இல்லையேல் கல்வியைக் கற்று வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு நல்ல தொழில் வாய்ப்பைப் பெறுவதுதான் அவருடைய விருப்பமாகவும் உள்ளது.
ஆகவே அவர்கள் இலங்கை அரசியல் விவகாரம் சார்ந்தோ, அல்லது ஈழத் தமிழர்களுடைய அரசியல் சார்ந்த பேசுவதை விரும்பாமையினால் அதனை தடுக்கிறார்கள்.
இதற்கான காரணம் நாம் ஒரு போராட்டத்தை நடத்தி ஏற்கனவே தோல்வி அடைந்து விட்டோம்.

அந்தத் தோல்வி மனப்பாங்கும், அதனால் ஏற்பட்ட மனவிரக்தியுமே இவ்வாறு தங்களுடைய சிறார்கள் அரசியல் பேசுவதற்கு அனுமதிப்பதில்லை எனக் குறிப்பிடுகிறார்கள். மேற்குறிப்பிட்ட ஆசிரியருடைய கருத்துக்கள் முற்றிலும் உண்மையானது என்பதை நாம் இங்கே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது ஈழச் சமூகத்திற்கு மிகவும் அவயகரமான ஒரு கருத்தியல் விதைக்கப்படுவது மாத்திரமல்ல எதிர்காலத்தில் நமது அடையாளத்தை தொலைத்து தமிழகத்தின் கருத்தியலே ஈழத்தமிழரின் கருத்து மண்டலமாக உறுப்பெற்றுவிடும் அபாயமும் உள்ளது. நாம் ஒன்றில் தோல்வி அடைந்து விட்டால் எல்லாவற்றிலும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற மனப்பயமும், சுயநலமும் இணைந்து மேற்படி இளம் சமூகத்தை இவ்வாறு வளர்க்க முற்படுகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
யுத்தத்தின் பின்னான உளவளப்படுத்தல் தமிழ் சமூகத்துக்கு வழங்கப்படாமையின் விளைவுகள்தான் இவை.
இவ்வாறான கருத்தியல் தாயக பாடசாலைகளில், வேலைத்தளங்களிலும், மட்டுமல்ல அல்ல புலம்பெயர்ந்த தேசங்களில் அனைத்து தமிழர்களிடமும் இத்தகைய நிலையே உள்ளது. இந்நிலை எனது வீட்டிலும், உங்கள் வீட்டிலும், எல்லோர் வீட்டிலும் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
இத்தோடு தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் வெற்றி என்பது உலகத்தமிழ் இளைஞர்களை, மாணவர்களை, சிறுவர்களை அரசியல் பேச வைத்திருக்கிறது என்பதனையும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
இங்கே ஈழத் தமிழர்கள் தங்களுடைய அரசியலை பேசுவதை மட்டுமே தடுத்து இருக்கிறார்கள் என்பதையும், மறுபுறத்தே சர்வதேச, இந்திய அரசியல் பேசுவதற்கு அவர்கள் தடையாக இல்லை என்பதையும் பார்க்கின்ற போது ஈழத் தமிழர்களிடம் இருக்கின்ற தற்பாதுகாப்பு உணர்வே இதற்கான அடிப்படைக் காரணம் என்பதை இணங்காத முடிகிறது.
ஆகவே ஈழத் தமிழர்களுக்கான அரசியல் அறிவும், சமூக அறிவும், இனம் பற்றிய பார்வையும் அதிகளவில் சீரழிந்து இருக்கிறது அல்லது சிதைவடைந்திருக்கிறது என்ற அடிப்படையில் தமிழ் சமூகம் தன்னை தேசமாக திரட்டி தேசிய கட்டுமானத்திற்கு செல்வதற்கான அனைத்து வேலைகளையும் உடனடியாக செய்ய வேண்டியது அவசியமானது.

மேலும் இன்றைய இலத்திரனியல் ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் கருத்துக்களை பெருமளவில் காவி செல்கின்ற கருத்துக் காவிகளாக இருப்பதனால் அவற்றினை சரியான முறையில் பயன்படுத்தவும், சரியாக வழிநடத்துவதற்குமான ஒரு சிந்தனை போக்கும், அறிவார்ந்த கருத்தாடல்களும் தமிழ் மக்கள் மத்தியில் விஸ்தரிக்கப்பப்பட வேண்டும்.
இல்லையேல் நாம் எமது சொந்தக் கருத்தியலை மறந்து, சொந்த விடயங்களை மறந்து, எமக்கு தேவைப்படாத அல்லது எமக்கு பயனளிக்காத கருத்தியல்களை உள்வாங்கி அதனையே கருத்து மண்டலமாக உருவாக்கி எமக்கு எந்த நலனையும் பயக்காது நமது இனத்திற்கோ, நமது வரலாற்றுக்கோ, நமது தாயகத்திற்கோ எந்தப் பயனையும் அளிக்காது பாலைவனத்தில் பெய்யும் மழையைப் போல ஆகிவிடுவோம்.
தமிழகத்தின் அனைத்து கலை, இலக்கியப் படைப்புகளும், நாகரிகப் பண்பாட்டு நடைமுறைகளும் ஈழத் தமிழர்களுடைய அன்றாட வாழ்வியலில் புகுந்து பிரதிபலிக்கும் நடைமுறையை கருத்தில் கொண்டு தமிழ் மக்கள் தமது அரசியலுக்கும், வாழ்வியலுக்கும், வரலாற்றுக்கும், பண்பாட்டுக்கும் ஏற்ற பொருத்தமானவற்றுக் கொள்வதும், பொருத்தமற்றவற்றை கழித்து விடுவதும் அவசியமானது.
இதனையே நன்னூலார் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே”எனக் குறிப்பிடுகிறது இங்கே ஈழத் தமிழர்கள் தமது வாழ்வுக்கான பயணத்தை தமது காலடியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டுமே தவிர அன்னியர் காலடியில் இருந்து அல்ல நாம் நாமாக இருக்கும் வரைதான் நமக்கான வாழ்வு நிலைக்கும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.thibaharan அவரால் எழுதப்பட்டு, 31 May, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.