கொலையில் முடிந்த காணி தகராறு! மாமனை கொன்ற மருமகன் (Photo)
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா மேற்கு வயல் பிரதேசத்தில் தாய் மாமனுக்கும் மருமகனுக்கும் ஏற்பட்ட கை கலப்பில் தாய் மாமன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா மேற்கு முள்ளிவட்டவான் விவசாய கண்டத்தில் உள்ள வயல் காணி தொடர்பாக சகோதரர் ஒருவருக்கும் அவரது சகோதரிக்கும் இடையில் காணி தகராறு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இன்று(21) சகோதரியின் மகனுக்கும் தாய் மாமனுக்கும் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கான காரணம் என்று ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் தாயாரான சேகு இஸ்மாயில் உம்மு சல்மா என்பவர் தெரிவிக்கையில்,
நானும் எனது கொலை செய்யப்பட்ட மகனும் வயலுக்கு உரம் எற்றிவதற்கு வந்த போது வயலுக்குள் எனது மகளின் மகன் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எனது மகன் ஏன் எனது காணிக்குள் வந்தாய் என்று எனது பேரனிடம் கேட்ட போது அவருக்கு அடித்து வெட்டிவிட்டு என்னிடம் உனது மகனை வெட்டியுள்ளேன் கொண்டு போ என்று சொல்லிவிட்டு எனது பேரன் போனார் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாகக் முள்ளிவட்டவான் விவசாய அமைப்பு தலைவர் ஐ.எல்.எம். முஸ்தபா கருத்து தெரிவிக்கையில்,
நானும் என்னுடன் மற்றுமொரு விவசாயியும் முச்சக்கரவண்டியில் வரும் போது உசனார் பௌசான் என்பவர் எனது மாமாவை வெட்டி விட்டேன், அவரை உங்கள் முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று தெரிவித்தார்.
அவருடன் நானும் என்னுடன் வந்தவர்களும் வந்து பார்த்த போது "அவர் மரணித்து விட்டார், நீங்கள் அம்புளன்ஸ்சுக்கு அறிவியுங்கள்" என்று பௌசான் சொல்லிவிட்டுச் சென்றார் என்று தெரிவித்தார்.
மீறாவோடை மாஜ்சோலை பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அலியார் ஹமீட் (வயது – 38) என்பவர் மரணமடைந்துள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை
பொலஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




