ஐக்கிய நாடுகள் உதவி செயலாளரின் இலங்கை பயணம் நிறைவு
ஐக்கிய நாடுகளின் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் பசுபிக் பகுதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் (ASG) காலித் கியாரி, ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்களத்தின் பிராந்திய பணிகளை மேற்பார்வையிடும் கியாரி, இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நீதி அமைச்சர் அலி சப்ரி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகம், மதத் தலைவர்கள், இராஜதந்திர சமூகத்தினரை சந்தித்தார்.
பயணத்தின் முடிவில், தமது கருத்துக்களை வெளியிட்ட கியாரி, கடந்த கால மற்றும் தற்போதைய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து இலங்கையில் பரந்த அளவான கருத்துக்களை பெற்றுக்கொள்ளமுடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டெரெஸ் ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்ததைத் தொடர்ந்து கியாரியின் விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.