இலங்கை விரையும் ஐக்கிய நாடுகளின் அடிமை முறை அறிக்கையாளர்
ஐக்கிய நாடுகளின் நவீன அடிமை முறைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா,(Tomoya Obokata) எதிர்வரும் 26 முதல் டிசம்பர் 3 வரை இலங்கைக்கான தனது முதல் பயணத்தை மேற்கொள்கிறார்.
அவர் தமது பயணத்தின்போது, ஆடைத் தொழில், தேயிலை பெருந்தோட்டங்கள், சுற்றுலா மற்றும் வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் துறைகளில் உள்ள தொழிலாளர் நிலைமைகளை அவர் ஆய்வு செய்யவுள்ளார்.
இலங்கையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மற்றும் தடைகளை அவர் மதிப்பீடு செய்யவுள்ளார்.
இந்தநிலையில் தாம், இலங்கையில், நவீன அடிமைத்தனம் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் உட்பட்ட விடயங்களை மதிப்பிடுவதில் ஆர்வமாக இருப்பதாக டொமோயா ஒபோகாடா தெரிவித்துள்ளார்.
தமது பயணத்தின்போது, அரச பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தாம், 2022 செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில், இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் டொமோயா ஒபோகாடா தெரிவித்துள்ளார்.