தொடர்ச்சியான மழையால் உமையாள்புரம் - விளாவோடை வீதியில் நிரம்பியுள்ள வெள்ளநீர்
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக உமையாள்புரம் - விளாவோடை செல்லும் வீதியின் குறுக்காக வெள்ள நீர் பாய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
குறித்த பாலத்தின் ஊடாக போக்குவரத்து செய்யும் மக்களை அவதானமாக செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகளின்போது வெள்ள நீர் வடிந்தோடக்கூடிய வகையில் முறையான கட்டமைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக பரவலாக வெள்ள நீர் கடக்காது முறையான நீரோட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டது.
வெள்ள அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ள நிலையில் குறித்த பாலத்திற்கு மேலாக அதிகளவான நீர் கடந்து செல்வதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அதிளவில் ஊடறுத்து செல்லும் வெள்ள நீரினால் குறித்த வீதியின் கீழ்ப்பகுதி அரிப்பெடுத்துள்ளமையால் அவ்வீதி ஊடாக பயணிப்பது தொடர்பில் அவதானமான செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம், கமநல அபிவிருத்தி திணைக்களம், கண்டாவளை பிரதேச செயலகம் ஆகியன இணைந்து படையினரின் உதவியுடன் அப்பகுதியில் ஏற்படும் பாதிப்பினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் அரிப்புக்குள்ளான விளாவோடை வீதி மற்றும் பாலம் உள்ள பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற தற்காலிகமான தடுப்பு நடவடிக்கையினை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் ஆகியோர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளனர்.




