மகிந்தவை அடுத்து நாமலுக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம்
தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் தனக்கும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் சொற்பொழிவை நிகழ்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களால் வெளியிடப்பட்ட கடும் அழுத்தம் காரணமாக, மகிந்த மற்றும் நாமலின் உரையாற்றும் வாய்ப்பு தடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினரும், இலங்கை தொடர்பான இங்கிலாந்து அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் முன்னாள் தலைவருமான மைக்கேல் மோரிஸ் பரோன் நேஸ்பியிடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார உறவு
இருவருக்கும் இடையிலான நேரடி சந்திப்பின் போது நாமல் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், முதலீடு மற்றும் பொருளாதாரத் திட்டங்களையும் நாமல் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒக்ஸ்போர்டு யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் சங்கங்களில் சொற்பொழிவுகளை வழங்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டங்களும், இதன் காரணமாக விரிவுரைகள் இரத்து செய்யப்பட்டமையும் கடந்த வாரம் பேசு பொருளாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.