ரஸ்யாவுக்கு எதிராக பிரித்தானியா விடுத்துள்ள பாரிய தடை
பிரித்தானியா, ரஷ்யாவிற்கு எதிராக வரலாற்றிலேயே மிகப்பாரிய தடைகளை அறிவித்துள்ளது.
இதற்கமைய, ரஷ்யாவிற்காக இரகசியமாக இயங்கும் எண்ணெய் கப்பல்களை குறிவைத்து இந்த தடைகளை பிரித்தானியா அறிவித்துள்ளது.
உக்ரைனில் நடக்கும் போருக்கு நிதியளிக்க ரஷ்யா பயன்படுத்தும் இரகசிய எண்ணெய் கப்பல்களை குறிவைத்து, பிரித்தானிய அரசாங்கம் இதுவரை அறிவிக்காத அளவிற்கு மிகப் பாரிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி
2024ஆம் ஆண்டின் ஆரம்பத்தின் முதல், இந்த நிழல் கப்பல்கள் 24 டொலர் பில்லியனுக்கும் மேற்பட்ட எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொண்டு, சர்வதேசத் தடைகளை மீறி ரஷ்யாவுக்கு வருவாய் ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், 100இற்கும் மேற்பட்ட நிழல் எண்ணெய் கப்பல்கள் பிரித்தானியாவின் தடைகளின் கீழ் வந்துள்ளன.
இத்தகைய பழைய கப்பல்கள் பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல், வழிகாட்டி தொழில்நுட்பத்தை தவிர்த்து, மாலுமி கண்காணிப்பு அமைப்புகளை முடக்கி பயணிப்பதால், ஐரோப்பிய ஆழ்கடல் கேபிள்கள், எண்ணெய் குழாய்கள் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளுக்கு மிகப்பாரிய அபாயமாக உள்ளன.
கட்டுப்பாட்டு மையம்
ஓஸ்லோவில் நடைபெற்றுள்ள ஜேஈஎப் (Joint Expeditionary Force) உச்சிமாநாட்டில், இத்தகவல் முக்கியமாக முன்வைக்கப்பட்டது.
மேலும், 22 முக்கிய கடல்சார் பகுதிகள் தற்போது நார்த்வுட் (UK) கட்டுப்பாட்டு மையத்தால் கண்காணிக்கப்படுகின்றன.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “இந்த நிழல் கப்பல்களை முற்றிலும் அழிக்கவும், தேவையான அனைத்தையும் பயன்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்யவும் நாம் தயாராக உள்ளோம்.” என்று கூறியுள்ளார்.
இக்கருத்துக்களுக்கு இணையாக, உள்நாட்டுப் பாதுகாப்பு, ராணுவ பயிற்சி மற்றும் விண்வெளி கண்காணிப்பு ஒப்பந்தங்களிலும் பிரித்தானியா- நோர்வே நாடுகள் ஒத்துழைக்க உள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |