பிரித்தானிய இடைத்தேர்தல் - நைஜல் ஃபரேஜை எதிர்த்து களம் காணும் 34 வேட்பாளர்கள்
பிரித்தானியாவின் வலதுசாரி ரிஃபார்ம் யூகே கட்சியின் தலைவரான நைஜல் ஃபரேஜ், தனது நாடாளுமன்ற உறுப்பினர் அண்மையில் பதவி விலகியதை அடுத்து, கிளாக்டன் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஃபரேஜை எதிர்த்து, சாதனை அளவாக 33 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே ஒரு தொகுதியில் மொத்தம் 34 வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதல்முறை என்று இத்தேர்தலை நடத்தும் டென்டரிங் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, தனக்குக் கிடைத்த நிதி நன்கொடைகளை முறையாக அறிவிக்காதது தொடர்பான சர்ச்சைகளில் சிக்கியதை அடுத்தே ஃபரேஜ் தனது பதவி விலகினார்.
இடைத்தேர்தல்
குறிப்பாக, கிரிப்டோகரன்சி தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 5 மில்லியன் பவுண்டுகள் ($6.7 மில்லியன்) மதிப்பிலான தொகையைப் பெற்ற விவகாரம் பெரும் பூதாகரமானதை அடுத்து இந்த பதவி விலகல் நிகழ்ந்தது.

இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஃபரேஜ், தான் மீண்டும் நாடாளுமன்றத்திற்குச் செல்வதை மக்களே தீர்மானிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் முக்கிய அரசியல் கட்சிகள் இந்த இடைத்தேர்தலை ஒரு "ஊடக சர்க்கஸ்" என்று கூறிப் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளன. இதன் காரணமாக, சிறிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் நையாண்டிப் பிரச்சாரகர்கள் இத்தேர்தலில் அதிகளவில் களம் இறங்கியுள்ளனர்.
இவர்களில், தலையில் ஒரு உலோகக் குப்பைத் தொட்டியை அணிந்து கொண்டு 'கவுண்ட் பின்ஃபேஸ்' என்ற பெயரில் போட்டியிடும் நகைச்சுவை நடிகர் ஜான் ஹார்வி மற்றும் பல தசாப்தங்களாக பிரித்தானியத் தேர்தல்களில் நையாண்டி அரசியல் செய்து வரும் 'அஃபிஷியல் மான்ஸ்டர் ரேவிங் லூனி' கட்சியின் தலைவர் ஆலன் ஹோப் ஆகியோர் ஃபரேஜுக்கு முக்கிய சவாலாக விளங்குகின்றனர்.
இவர்களுடன் தீவிர வலதுசாரி நடிகரான லாரன்ஸ் பாக்ஸும் போட்டியிடுகிறார். எதிர்வரும் ஆகஸ்ட் 13 அன்று நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில் ஃபரேஜ் வெற்றி பெறுவதற்கே 95 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக இணையவழி கணிப்புகள் தெரிவிக்கின்றன.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri