180 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எகிப்தின் ஹுர்காடா நகரில் இருந்து லண்டன் லூட்டன் நோக்கி 180 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று, கடந்த மே 19ஆம் திகதி அவசரமாக ரோம் நகருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
விமானத்தின் சரக்குப்பகுதியில் (Hold luggage) வைக்கப்பட்டிருந்த பையில் இருந்த கையடக்க தொலைபேசிக்கு பவர் பேங்க் (Power bank) இணைத்திருப்பதாக பயணி ஒருவர் ஊழியர்களிடம் தெரிவித்ததே இந்த அவசர நிலைக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
விமானம் புறப்பட்டு சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் இந்தச் சம்பவம் குறித்து விமானிக்கு எச்சரிக்கப்பட்டதை அடுத்து, அடுத்த 20 நிமிடங்களுக்குள் ரோம் நகரின் பியுமிசினோ (Fiumicino) விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த அவசரகால தரையிறக்கத்தைத் தொடர்ந்து பயணிகளுக்கு ஒரே இரவில் தங்குவதற்கான வசதிகளை விமான நிறுவனம் வழங்கியதுடன், அடுத்த நாள் மதியம் 2 மணியளவில் லூட்டன் நகருக்கான மாற்று விமானத்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அபாயநிலை..
போர்ட்டபிள் சார்ஜர்கள் (பவர் பேங்க்கள்) அதிக வெப்பமடைந்தாலோ அல்லது ஷார்ட் சர்க்யூட் (Short-circuit) ஏற்பட்டாலோ தீ விபத்து மற்றும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே கடுமையான விதிகளை விதித்துள்ளன.

ஈஸிஜெட் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படி, லித்தியம் பேட்டரிகள் கொண்ட பவர் பேங்க்களை கைச் சாமான்களில் (Hand luggage) மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என்பதுடன், அவற்றை பிரதான சரக்குப்பகுதியில் வைப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த சாதனங்களின் திறன் 160 வாட்-அவர்ஸை (160Wh) அதிகமாக இருக்கக் கூடாது என்பதுடன், விமானப் பயணத்தின் போது மற்ற சாதனங்களை மின்னேற்ற இவற்றை பயன்படுத்துவதும் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஏர் சீனா (Air China) A321 ஏர்பஸ் விமானத்தில் பவர் பேங்க் ஒன்று அதிக வெப்பமடைந்து தீப்பிடித்த சம்பவம் பதிவாகியிருந்தது, எனினும் ஊழியர்கள் உடனடியாக அத்தீயை அணைத்திருந்தனர்.
இத்தகைய பாதுகாப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு, பொதுவாக விமானத்தில் பயணிப்பவர்கள் இவ்விடயம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ள டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை - மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் அட்டைகள் ஒழிப்பு
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 8 மணி நேரம் முன்
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam