நாட்டை இருளில் மூழ்கடிப்போமென அமெரிக்கா மிரட்டலாம் - அமைச்சர் எச்சரிக்கை
அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை மிகவும் ஆபத்தானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவின் நியூ பொட்ரஸ் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை நாட்டுக்கு பாதகமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள தொலைக்காட்சியில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
கடந்த 17ஆம் திகதி கையொப்பமிடப்பட்டுள்ள உடன்படிக்கையை நாம் பார்க்கவில்லை. இந்த உடன்படிக்கையின் அடிப்பைடையில் எரிவாயு விநியோகம் செய்யும் ஏகபோக உரிமை நியூ பெட்ரோஸ் நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றது.
சீனா போன்றல்ல அமெரிக்காவை உங்களுக்குத் தெரியும், அமெரிக்கா இலங்கை உள்விவகாரங்களில் தலையீடு செய்யும்.
எதிர்காலத்தில் ஓர் நாள், நாட்டை சமஷ்டியாக்கு இல்லாவிட்டால் நாட்டை இருளில் மூழ்கடிக்கச் செய்வோம் என அமெரிக்கா மிரட்ட முடியும். அதற்கான சாவியாகவே இந்த உடன்படிக்கை அமைந்துள்ளது.
நாட்டை ஆட்டுவிக்க செய்யும் மந்திர சாவியாக இந்த எரிவாயு ஏகபோக உரிமையை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவிற்கு முடியும். இது ஓர் ஆபத்தான நிலைமையாகும். யார் கையொப்பமிட்டிருந்தாலும் பிழை பிழைதான்.
இந்த உடன்படிக்கையை ரத்து செய்ய முடியும் என கருதுகின்றேன் என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கை தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.