டயர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது (Photos)
நாட்டின் அசாதாரணமான சூழ்நிலைக்கு காரணமான அரசாங்கத்திற்கு எதிராக டயர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்களை கைது செய்து விசாரணையின் பின் எச்சரித்து விடுவித்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று(28) வவுனியா, செட்டிகுளம் - நேரியகுளம் வீதியில் உள்ள வீரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அசாதாரண சூழ்நிலைக்கு காரணமான ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இணைந்து இன்று (28) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையிலேயே வவுனியா, செட்டிகுளம் - நேரியகுளம் வீதியில் உள்ள வீரபுரம் பகுதியில் வீதியில் டயர் போட்டு எரித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பொது வீதிக்கு சேதத்தை ஏற்படுத்தியதாக வீரபுரம் மற்றும் காந்திநகர் ஆகிய பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் அவர்களது வாக்கு மூலங்களை பதிவு செய்த பின் எச்சரிக்கப்பட்டு அவர்களை விடுவித்தனர்.
இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் இளைஞர்
உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக பொலிஸார்
மேலும் தெரிவித்துள்ளனர்.











