மட்டக்களப்பில் போதை பொருளுடன் இரு வியாபாரிகள் கைது!
போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம்.ஜி பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.
கைது
கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்ட போதை பொருளை வியாபாரத்துக்காக எடுத்து சென்ற போதே குறித்த இரு வியாபாரிகளை இன்று புதன்கிழமை (20) அதிகாலையில் நகர்பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று அதிகாலை 4.00 மணியளவில் திருகோணமலை நகர்பகுதி வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது கொழும்பில் இருந்து பேருந்து ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் குறித்த போதை பொருளை கடத்தி கொண்டு வந்து கைது செய்யப்பட்ட வியாபாரிகளிடம் வழங்கிய நிலையில் அதனை வாங்கி கொண்டு வரும்போது வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கை
இதன்போது, 23 வயதுடைய ஒருவரிடமிருந்து 3200 மில்லிக்கிராம் போதைப்பொருளும், 23 வயதுடைய ஒருவரிடம் 4500 மில்லிகிராம் ஜஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒரு இலச்சத்து 20 ஆயிரத்து 640 ரூபா பணம், 2 கையடக்க தொலைபேசிகளையும் மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் பூம்புகார் லயன்ஸ் கிளப் வீதி மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




