ஐரோப்பா செல்ல முயற்சித்த தந்தையும் மகனும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
போலியான டொமினிகன் குடியரசு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைய முயன்ற ஈராக் பிரஜைகள் இருவரை நாடு கடத்துவதற்கு கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருவரும் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்லும் நோக்கில் போலியான டொமினிகன் குடியரசு கடவுச்சீட்டைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போலியான கடவுச்சீட்டு
போலியான டொமினிகன் குடியரசு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தந்தை மற்றும் 18வயதுடைய மகன் ஆகிய இருவருமே துபாயிலிருந்து இன்று (07.04.2023) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்கள்.
இருவரும் இலங்கைக்குள் நுழைவதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள குடிவரவுத் திணைக்கள கரும பீடத்தில் டொமினிகன் குடியரசு கடவுச்சீட்டு உட்பட்ட ஆவணங்களை வழங்கியுள்ளனர்.
இதன்போதே குறித்த கடவுச்சீட்டு போலியானவை என தெரியவந்துள்ளதுடன் அவர்கள் இருவரையும் நாடு கடத்த குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.