போலி கடவுச்சீட்டு விவகாரம்! டயனா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படுமா, இல்லையா என்பது தொடர்பான தீர்ப்பு ஏப்ரல் 24 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (06) இவ்வாறு உத்தரவிட்டார்.
மனுதாரர் விடுத்த கோரிக்கை
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் டயனா கமகேவை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய குடியுரிமையை கொண்டுள்ளதாகவும் அரசியலமைப்புக்கு அமைய, அவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரப்பட்டு டயனா கமகேவின் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி, சிவில் செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத்தினால் மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.