மட்டக்களப்பில் வீதியோரத்தில் மீட்கப்பட்ட சடலம்: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
புதிய இணைப்பு
மட்டக்களப்பில் வீதி ஓரத்தில் இருந்து கடந்த 11ஆம் திகதி சடலமாக மீட்கப்பட ஆண், தலையில் ஏற்பட்ட தாக்குதலில் இரத்தம் கசிந்து உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் இது தொடர்பில் தெரியவந்துள்ளதோடு சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு 14.08.2022 5.20PM
மட்டக்களப்பில் ஆண் ஒருவர் வீதி ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் இரு இளைஞர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் நேற்று(13) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 22 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் கைதாகியுள்ளதோடு சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
முனைத்தீவு - பெரிய போரதீவு களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான வல்லிபுரம் அன்பழகன்(வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிசிடிவி கமரா பதிவுகள்
கடந்த12 ஆம் திகதி குறித்த சடலத்தை அவரது மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான விசாரணையில் சிசிடிவி கமரா ஒன்றினை சோதனையிட்டபோது அதில் உயிரிழந்தவரை இருவர் மோட்டார் சைக்கிள் வந்து இரு தடவைகள் பொல்லால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் மதுபோதைக்கு அடிமையாகியவரென்றும், மனைவியுடன் பிரிந்து அவரது தாயாருடன் வாழ்ந்து வந்ததுடன் வவுணதீவு பிரதேசத்தில் நகைகடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்ப கட்ட விசாரணை
சடலமாக மீட்கப்பட்டவர், வீதியிலுள்ள மதுபான விற்பனை நிலையத்துக்கு அருகில் ஆடை இன்றி வீதியில் இருந்துள்ள நிலையில் அந்த வீதியில் மோட்டார்சைக்கிளில் பிரயாணித்த இரு இளைஞர்களும் வீதியில் ஆடை இன்றி மதுபோதையில் ஆண் ஒருவர் இருப்பதை கண்டுள்ளனர்.
அந்த வீதியால் பெண்கள் பிரயாணிப்பதால், அவரை திருத்துவதற்காக தும்புத்தடி பொல்லால் காலை வேளையில் தாக்கிவிட்டு சென்று பின்னர் மீண்டும் அந்த வீதியால் திரும்பிவரும் போது அவர் அவ்வாறே இருந்துள்ளதை கண்டு மீண்டும் தாக்கிவிட்டு சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சடலமாக மீட்கப்பட்டவரின் பிரேத பரிசோதனை நாளை இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது