வவுனியாவில் கத்திக்குத்திற்கு இலக்காகி இருவர் படுகாயம்! ஒருவர் கைது
வவுனியா கண்டி வீதி , வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மருமகன் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் மாமியார் மற்றும் மச்சான் இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
வவுனியா வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மனைவியின் சகோதரனுடன், தாக்குதலை மேற்கொண்ட நபர் தர்க்கத்தில் ஈடுபட்டு முரண்பட்டுள்ளார் . இதன்போது தன்வசம் மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றினால் குத்தியுள்ளார் .
இதனை அவதானித்த மாமியார் ஓடிச் சென்று தடுக்க முற்பட்டபோது அவரும் கத்தியால் குத்தப்பட்டுள்ளார் . இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .
இதன்போது தாக்குதலை மேற்கொண்ட கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞனை அப்பகுதியிலிருந்தவர்கள் தடுத்து வைத்திருந்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் .
நீண்ட நாட்களாக குடும்ப முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளதாகவும் இதன் வெளிப்பாடே கத்திக்குத்து சம்பவம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.