குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம், சட்டமா அதிபரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது நேற்றையதினம்(11) நகர்தல் பத்திரம் மூலம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1990.07.12 ஆந் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை - மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்படட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட அப்துல் மஜீத் அப்துல் ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மனிதப்புதைகுழி
அதனடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிவான் குறித்த சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாக நியாயமாக சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கையிடுமாறு உரிய அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கட்டளையாக்கி இருந்தார்.
அதனடிப்படையில் நில அளவைத் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், தொல்லியல் திணைக்களம், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், தடயவியல் மருத்துவம் மற்றும் நஞ்சியல் நிறுவகம் என்பன தமது ஆய்வுகளை மேற்கொண்டு குறித்த சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நியாயமாகச் சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முடிவுறுத்தி மன்றுக்கு திட்ட வரைபையும் சமர்ப்பித்திருந்தனர்.
இந்நிலையில், மன்றுக்கு சமர்ப்பணங்களை மேற்கொண்டிருந்த களுவாஞ்சிக்குடி பொலிஸார் குறித்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அதனை நீதிமன்றுக்கு அறிவிப்பதற்குத் தவணையொன்றை வழங்குமாறு மன்றுக்குத் தெரிவித்திருந்தனர்.
அதன் பிரகாரம், 04.10.2020 இல் சட்டமா அதிபரினால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக குறித்த வழக்கானது கிடப்பிலிடப்பட்டிருந்தது.
நீதிமன்றின் உத்தரவு
இப்பின்னணியிலேயே இவ்வழக்கின் முறைப்பாட்டாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நேற்று(11) குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணியால் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கானது திறந்த மன்றில் அழைக்கப்பட்டது.
இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரணிகளின் சமர்ப்பணம் மற்றும் வழக்கேட்டை மிக நுணுக்கமாக நீதிமன்றம் ஆராய்ந்தது.
இதன்போது, முறைப்பாட்டாளரின் முறைப்பாடானது நீதிமுறையாக அணுகப்படாமல் நிலுவையாக உள்ளமையானது நீதியின்பாற்பட்டதல்ல எனும் அடிப்படையில் குறித்த வழக்கை எதிர்வரும் 21.07.2025 க்கு தவணையிடுவதாகவும் குறித்த தினத்தில் மன்றில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபருக்கும், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கும் களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அறிவித்தல் அனுப்புமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான முஹைமீன் காலித் , முபாறக் முஅஸ்ஸம் ஆகியோர் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |