தனியார் வகுப்புகள், விருந்து நிகழ்வுகளுக்கு தடை! இலங்கையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
இலங்கையில் கோவிட் - 19 வேகமாக பரவி வரும் நிலையில், தனியார் வகுப்புகள், விருந்து நிகழ்வுகள் மற்றும் பொது ஒன்றுகூடல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. மே 31ம் திகதி வரை இந்த தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கோவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மே 31ம் திகதி வரை செல்லுபடியாகும் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, கெசினோக்கள், இரவு நேர கிளப்புகள், உடற்பிடிப்பு நிலையங்கள் (spas) மற்றும் கடற்கரை விருந்துகளும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.
மேலும் சிறுவர் பூங்காக்கள், திருவிழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளன, அத்துடன், நீச்சல் குளங்களும் மே 31ம் வரை மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஏனையவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கோரப்பட்டுள்ளது.
இடத்தின் அடிப்படையில் ஒரே நேரத்தில் 50 சதவீத ஆட்களை மட்டுமே அனுமதிக்க பல்பொருள் அங்காடிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பகல்நேர பராமரிப்பு நிலையங்கள், பாலர் பாடசாலைகள் மற்றும் பாடசாலைகள் 50 சதவீத திறனுடன் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமணங்கள் அதிகபட்சம் 150 விருந்தினர்களுடன் நடத்தப்படலாம், இறுதிச் சடங்குகளில் எந்த நேரத்திலும் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.