நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி ஒத்திகை நிகழ்வு
யாழ்ப்பாணம் - வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பருத்தித்துறை கரையோரப் பகுதியில் இன்று(5) சுனாமி அனர்த்த வெளியேற்றுகை ஒத்திகை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கரையோர கிராம மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
உலகளாவிய ஒருங்கிணைந்த சுனாமி அனர்த்த வெளியேற்றுகை ஒத்திகை நிகழ்வு இலங்கை உட்பட 28 நாடுகளில் கரையோர மாவட்டங்களில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஒத்திகை நிகழ்வு
இலங்கையில் மாத்தறை, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஜே/401 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்றது.

இதன்போது ஏற்கனவே கிராமசேவை உத்தியோகத்தரால் அறிவிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் ஆகிய இரு பகுதியினரையும் பாதுகாப்பாக வெளியேற்றி வடமராட்சி இந்து மகளிர் கல்லுரியில் தங்க வைக்கப்பட்டு வெளியேற்று ஒத்திகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம், கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், முப்படைகள், பொலிஸ், தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம், உள்ளூராட்சி மன்றங்கள், பாடசாலைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல தரப்பினர் பங்கேற்றனர்.
இந் நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர், சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்வானது தெரிவு செய்யப்பட்ட கரையோர மாவட்டங்களான காலி, களுத்துறை,யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுனாமி அனர்த்தம்
சுனாமி அனர்த்தம் அல்லது தாக்கம் ஏற்பட்டால் எவ்வாறு உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்வது என்பதற்கான ஒத்திகையாகவும், விழிப்புணர்வாகவும் இந் நிகழ்வு அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலைகள் தாக்கத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புகளைப் போல், இன்னும் ஒரு தடவை உயிர் இழப்புக்கள் ஏற்படாவண்ணம் உத்தியோகத்தர்கள், அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என்பதற்கான நிகழ்வாக இது அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
,அந்தவகையில் இன்றைய நிகழ்வில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், பருத்தித்துறை பிரதேச செயகத்தினர், செஞ்சிலுவைச் சங்கத்தினர், சுகாதார பணிமனையினர், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் உள்ளிட்டவர்களுக்கு தமது நன்றியினையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வடமராட்சி
சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று காலை(5) பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் ஆரம்பமாகியது.
இதன்போது, காலை 9:15 மணியளவில் சுனமி எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவிகள் வகுப்பு வகுப்பாக அணிவகுக்கப்பட்டனர்.
[F8Z35N
அத்தோடு, வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் இடைத்தங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு மருத்துவ வசதிகள், உணவு, உட்பட பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த சுனாமி ஒத்திகை நிகழ்வில் சுமார் 500 வரையான வடமராட்சி மெதடிஸ்த பெண்கள கல்லூரி மாணவர்களும், பொதுமக்கள் சுமார் 250 பேர் வரையும் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு
சுனாமி ஒத்திகை நிகழ்வு மற்றும் பயிற்சி என்பன புதன்கிழமை(05) காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பில் இரு வேறு பகுதிகளில் நடைபெற்றன.
சுனாமி அனர்த்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு மட்டக்களப்பு கன்னன்குடா மகா வித்தியாலயா பாடசாலையிலும், காத்தான்குடியில் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் இந்த ஒத்திகை நிகழ்வு நடைபெற்றன.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், இராணுவத்தினர் மற்றும் கல்வி திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சத்யானந்தி, இராணுவத்தினர் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கன்னன்குடா பாடசாலையில் மாணவர்களுக்கு தெளிவு ஊட்டும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
சுனாமி ஏற்பட்ட காலத்தில் இப்பகுதியில் கடல் நீர் வந்ததுடன் அனேகமான சடலங்கள் கரையொதுங்கியதை முன்னிட்டு இவர்களுக்கு சுனாமி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பயிற்சிகளும் விழிப்புணர்வு கருத்தரங்கும் நடைபெற்றது.
அம்பாறை
அம்பாறையில் தேசிய சுனாமி ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்வானது இன்றைய தினம் (05) காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்வானது தெரிவு செய்யப்பட்ட கரையோர மாவட்டங்களான காலி ,களுத்தறை,யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அறிவுறுத்தல்
அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவித்தலில், பொதுமக்கள் எந்த வகையிலும் பீதியடையத் தேவையில்லை எனவும் இதுவொரு ஒத்திகை நிகழ்வு மாத்திரமே என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி ஒத்திகையின் மூலம் இலங்கை சுனாமி போன்ற அர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான தயார் நிலையில் பரிசோதிப்பதற்கான ஒரு ஏற்பாடாக அமைகின்றதால் இதன் போது மக்கள் பீதி அடையத் தேவையில்லை என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரம அறிவித்துள்ளார்.





